மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக யுவராஜ் சிங்கும் மகேந்திர சிங் தோனியும் இருந்தனர். ஆனால் கேப்டன் பதவி யாருக்கு என்று கேள்வி வந்ததும் யுவராஜ் தமக்கு தான் பொறுப்பு வரப்போகிறது என்று ஆசையில் இருந்தார். ஏனென்றால் 2007 டி20 உலக கோப்பை போட்டியில் சேவாக்கிற்கு பிறகு அணியின் சீனியர் வீரர் என்றால் அது யுவராஜ் சிங் தான்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் தோனிக்கு அந்தப் பதவி கிடைத்தது. ஆனால் அப்போது, யுவராஜ் தாம் வருத்தம் அடைந்ததாக வெளியே காட்டிக் கொண்டது இல்லை. ஆனால் காலம் மாற மாற காட்சிகளும் மாறத் தொடங்கியது. யுவராஜ் சிங்கும், தோனியும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் யுவராஜ் சிங் தந்தை தோனியை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டார்.

தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி தான் கெடுத்தார் என்று வெளிப்படையாக அவர் குற்றச்சாட்டை வைத்தார். இதற்கும் யுவராஜ் சிங் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் கூட நீங்களும் தோனியும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என கேட்டதற்கு, தோனி எனக்கு நெருங்கிய நண்பர்கள் எல்லாம் கிடையாது.
நாங்கள் இந்திய அணிக்காக விளையாடினோம். விளையாடும் போது ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வோம். அவ்வளவுதான் தவிர, நாங்கள் அடிக்கடி கிரிக்கெட்டில் இல்லாத நேரத்தில் கூட பேசிக்க மாட்டோம். எங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பெல்லாம் கிடையாது என்று பதில் அளித்து இருந்தார். இதேபோன்று தோனியும் யுவராஜ் சிங் உடனான நட்பு குறித்து எங்கேயும் வெளியே பேசியது கூட கிடையாது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற யுவராஜ் சிங் இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் உங்கள் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரு வீரர் பேட்டிங் ஆடி அதை செய்ய வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் யாரை பேட்டிங் செய்ய அழைப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. யுவராஜ் சிங், சச்சினின் தீவிர ரசிகர் ஆவார்.
ஆனால் யுவராஜ் சிங் சச்சின் பெயரையும் சொல்லவில்லை. இந்திய அணியை பலமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் காப்பாற்றியவர் என்றால் அது ராகுல் டிராவிட் தான். ரசிகர்கள் அவரை பெருஞ்சுவர் என்று அழைப்பார்கள். ஆனால் யுவராஜ், டிராவிட்டின் பெயரையும் சொல்லவில்லை. சரி ஒரு நாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த விராட் கோலி பெயரையாவது சொல்வார் என்று பார்த்தால் அவர் பெயரும் சொல்லவில்லை.
சரி தோனி, யுவராஜ் நண்பராக அறியப்பட்டாரே அவர் பெயரை கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அதையும் சொல்லவில்லை. யாருமே எதிர்பார்க்காத வகையில் 37 வயது வீரரான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை யுவராஜ் குறிப்பிட்டார்.யுவராஜ் சிங்கும் ரோகித் சர்மாவும் ஆரம்ப காலத்தில் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்கள்.2007 டி20 உலக கோப்பையில் யுவராஜ் விளையாடிய போது ரோஹித் சர்மா ஒரு இளம் வீரராக அந்த தொடரில் பங்கேற்றார்.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால் ரோகித் சர்மா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதனால் ரோகித் மனம் தளர விடக்கூடாது என்பதற்காக யுவராஜ் சிங் அவரை அழைத்து ஹோட்டலில் டின்னருக்கு சென்றிருக்கிறார். அப்போது உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை என்று நீ சோகம் அடைய வேண்டாம். நீ நிச்சயம் பெரிய வீரராக வருவாய் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இரு என்று கூறி அவருக்கு ஆறுதல் கூறினார். இதனை ரோகித் சர்மாவை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் தான் யுவராஜ் சிங் ரோகித் சர்மாவின் பெயரை கூறி இருக்கலாம் என தெரிகிறது.