ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக வருகிறார் யுவராஜ் சிங்.. அடுத்த சீசன் முதல் புதிய பயணம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையவுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜே.எஸ்.டபிள்யூ (JSW) குழுமத்தின் வசம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் நிலையில், அணியின் பயிற்சிப் பிரிவை வழிநடத்தவுள்ள சௌரவ் கங்குலியுடன் இணைந்து யுவராஜ் சிங் செயல்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக யுவராஜ் சிங் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான பார்த் ஜிண்டால் விளக்கத்தை இன்னும் அளிக்கவில்லை.

யுவராஜ் சிங்கிற்கு ஐபிஎல் தொடரில் அதிகாரப்பூர்வப் பயிற்சியாளராக இதுவே அறிமுகப் பயணமாகும். 44 வயதான யுவராஜ் சிங், கடந்த சில ஆண்டுகளாக அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் அப்துல் சமத் போன்ற வளர்ந்து வரும் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரின் ஆட்டத்திறனை மேம்படுத்தவும் அவர் உதவியுள்ளார்.
இருப்பினும், இதுவரை அவர் எந்தவொரு ஐபிஎல் அணியின் அதிகாரப்பூர்வப் பயிற்சிப் பிரிவிலும் இடம்பெற்றதில்லை. இளம் கிரிக்கெட் வீரர்களுடன் அவர் இணைந்து பணியாற்றும் விதம் மற்றும் அவர்களின் ஆட்டத்திறனில் அவர் ஏற்படுத்திய தாக்கம், குறிப்பாக அபிஷேக் சர்மாவின் சிறப்பான ஆட்டம் ஆகியவை பல ஐபிஎல் அணிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
யுவராஜ் சிங்கின் பரந்த அனுபவமும், களத்தில் இறங்கி நேரடியாகப் பயிற்சி அளிக்கும் முறையும் அணிக்கு பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை அதிகாரப்பூர்வப் பொறுப்பில் இணைக்கும் முதல் அணியாக அமையவுள்ளது.
"யுவராஜ் சிங் போன்ற ஒரு வீரர் தங்களது அணியின் டக்-அவுட்டில் (dugout) இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? அவரது சமகால வீரர்களான ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகீர் கான், வீரேந்தர் சேவாக் போன்றோர் ஏற்கனவே ஐபிஎல் தொடர்களில் பயிற்சியாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். யுவராஜ் சிங் இந்த நிலைக்கு வருவதற்குச் சற்று கூடுதல் காலம் எடுத்துக் கொண்டாலும், அவர் தற்போதைய இளம் வீரர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டு, இந்த காலத்து கிரிக்கெட்டின் தேவைகளை மிகச் சிறப்பாகப் புரிந்து வைத்துள்ளார்" என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
"அவர் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். இது வெறும் தொலைபேசி அழைப்புகளுடனோ அல்லது ஆன்லைன் ஆலோசனைகளுடனோ முடிந்துவிடுவதில்லை. மைதானத்தில் பல மணி நேரங்கள் செலவிட்டு, வலைப்பயிற்சியின் போது வெயிலையும் பொருட்படுத்தாமல் வீரர்களின் பின்னால் நின்று அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்குகிறார். அவரது இந்த நேரடி அணுகுமுறை பல இளம் கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது" என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

