லண்டன்: உலக சாம்பியன்ஸ் லீக் (WCL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன், வரும் ஜூலை 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இம்முறை இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டனாக சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் மீண்டும் களமிறங்கவுள்ளார். உலகக் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட இந்தத் தொடர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோத உள்ள போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடரின் இரண்டாவது சீசன் இங்கிலாந்தில் உள்ள நான்கு முக்கிய மைதானங்களான எட்ஜ்பாஸ்டன் (பிர்மிங்காம்), கவுண்டி கிரவுண்ட் (நார்தாம்டன்), கிரேஸ் ரோடு (லெய்செஸ்டர்) மற்றும் ஹெடிங்லே (லீட்ஸ்) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும்.

அனைத்து அணிகளும் ஒரு முறை மற்ற அணிகளுடன் மோதிய பிறகு, முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது சீசனுக்கான ஆர்வம் இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த சீசனில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை வென்று இருந்தது.
யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியில், ஷிகர் தவான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, யூசுப் பதான், குர்கீரத் மான் சிங் போன்றோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். ஆல்-ரவுண்டர்களாக இர்பான் பதான் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சுப் படையில் ஹர்பஜன் சிங், வினய் குமார், சித்தார்த் கவுல், வருண் ஆரோன், அபிமன்யு மிதுன், பியூஷ் சாவ்லா மற்றும் பவன் நேகி ஆகியோர் உள்ளனர். இந்த அணி முதல் சீசனின் நடப்பு சாம்பியனாகக் களமிறங்குகிறது.
இந்தியா சாம்பியன்ஸ் அணி ஜூலை 20 அன்று பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக ஆடுகிறது. தொடர்ந்து, ஜூலை 22 அன்று தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸையும், ஜூலை 26 அன்று ஆஸ்திரேலியா சாம்பியன்ஸையும், ஜூலை 27 அன்று இங்கிலாந்து சாம்பியன்ஸையும், ஜூலை 29 அன்று மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸையும் எதிர்கொள்கிறது. அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 31 அன்று நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 2 அன்று நடைபெறும்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், யூசுப் பதான் போன்ற முன்னாள் ஐபிஎல் மற்றும் சர்வதேச அனுபவம் மிக்க வீரர்கள் இந்தியா அணியின் பலமாக உள்ளனர். முதல் சீசனில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா அணி, இந்த சீசனிலும் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்கும்.
எனினும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்பதால், இந்தத் தொடர் பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் முன்னாள் நாயகர்களின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.