
ஒரே சமயத்தில்..
கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியில் ஒரே சமயத்தில் கிரிக்கெட் ஆடியவர்கள். கௌதம் கம்பீர் சிறந்த துவக்க வீரராக ஆடியவர். யுவராஜ் சிங் சிறந்த பினிஷராக அறியப்பட்டார். இருவரும் இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.

உலகக்கோப்பை நாயகர்கள்
கௌதம் கம்பீர் 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரர் ஆவார். இறுதிப் போட்டிகளில் பேட்டிங்கில் இந்திய அணியை தாங்கியவர். யுவராஜ் சிங்கும் இரண்டு உலகக்கோப்பை தொடர்களிலும் பல முக்கிய போட்டிகளை வெல்ல காரணமாக அமைந்தவர்.

இறுக்கமான கம்பீர்
யுவராஜ் சிங் களத்துக்கு உள்ளே ஆக்ரோஷமானவர். களத்துக்கு வெளியே ஜாலியான ஆள். ஆனால், கௌதம் கம்பீர் எப்போதும் இறுக்கமாகவே காணப்படுவார். அதுவே அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட காரணம் என கூறப்படுவதும் உண்டு.

வேடிக்கையான பதிவு
தற்போது கௌதம் கம்பீர் பாஜக கட்சியில் இணைந்து மக்களவை உறுப்பினராக இருக்கிறார். இருந்தாலும் கிரிக்கெட் வர்ணனை, விவாதங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வேடிக்கையான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

ஸ்லிப் கேட்ச்
உம்மென்று முகத்தை ஏமாற்றத்துடன் வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், "அவுட் ஸ்விங் ஆன பந்தை எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த உடன் என்னை நானே பார்த்துக் கொண்ட போது.." என குறிப்பிட்டு சிரிக்கும் ஈமோஜிக்களை பதிவிட்டு இருந்தார்.

உன் ஈமோஜியாவது சிரிக்குதே
அதைக் கண்ட யுவராஜ் சிங், அந்த பதிவுக்கு கமென்ட் செய்து இருந்தார். "குறைந்தபட்சம் உன் ஈமோஜியாவது சிரிக்குதே.." என குறிப்பிட்டு செமயாக கிண்டல் செய்து இருந்தார் யுவராஜ். கௌதம் கம்பீர் இதற்கு எந்த பதிலும் கூறவில்லை.


Click it and Unblock the Notifications











