மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த யுவராஜ் சிங்கை, விராட் கோலி தான் அதிரடியாக அணியிலிருந்து நீக்கினார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா குற்றஞ்சாட்டி இருக்கிறார். இந்திய அணிக்கு 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை போன்ற தொடரை யுவராஜ் வென்று கொடுத்தார்.
2011 ஆம் ஆண்டு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் அதிலிருந்து மீண்டு வந்து கடும் போராட்டத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பினார். எனினும் 2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு யுவராஜ் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்த கருத்து தெரிவித்துள்ள உத்தப்பா, நீங்கள் யுவராஜ் சிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் புற்றுநோயை வீழ்த்தி அதிலிருந்து மீண்டு வந்து சர்வதேச போட்டிக்கு திரும்பினார். யுவராஜ் சிங் நமக்கு இரண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக பல போட்டிகளில் இருந்திருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு வீரரை நீங்கள் கேப்டனாக மாறிய பிறகு உங்களுடைய நுரையீரல் முன்பு போல் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அவரை அணியை விட்டு நீக்கினால் அது சரியான விஷயமா? யுவராஜ் சிங்கின் கடின காலத்தை நீங்கள் அருகில் இருந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் யுவராஜ்க்கு என்ன நடந்தது என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை.
நான் பார்த்தவரை யுவராஜ் கடுமையாக தடுமாறினார். ஆனால் நீங்கள் கேப்டனாக மாறிய பிறகு உங்களைப் போலவே மற்றவர்களும் உடல் தகுதியை வைக்க வேண்டும் என தகுதியை நிர்ணயம் செய்தீர்கள். ஆனால் சிலருக்கு நாம் விதிவிலக்கு அளித்திருக்க வேண்டும். புற்று நோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங்கிற்கு அந்த விதிவிலக்கை கொடுத்து இருக்க வேண்டும்.
வாழ்க்கையின் மிக கடினமான விஷயத்தை அவர் தோற்கடித்து இந்திய அணிக்குள் வந்தார். உடல் தகுதியை நிர்ணயிக்கும் யோ யோ டெஸ்டில் தமக்கு 2 புள்ளிகளை குறைத்து விதிவிலக்கு கொடுங்கள் என யுவராஜ் சிங் கேட்டார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. எனினும் கடும் உழைப்புக்கு பிறகு யுவராஜ் சிங் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார். யுவராஜ் சிங்கிற்கு ஒரு தொடரில் பெரிய அளவு ரன்கள் கிடைக்கவில்லை.
ஆனால் அதனை காரணம் காட்டி யுவராஜ் சிங்கை நிரந்தரமாக அணியை விட்டு நீக்கி விட்டார்கள். அப்போது இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் தான் யுவராஜ் சிங்கை அதன் பிறகு சேர்க்கவில்லை. அப்போது விராட் கோலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.
நான் கோலியின் கேப்டன்சி கீழ் விளையாடுது கிடையாது. ஆனால் நான் பார்த்தவரை விராட் கோலி ஏன் வழியை பின்பற்றுங்கள், இல்லை வெளியேறுங்கள் என்ற தோரணையில் இருக்கிறார். ஆனால் கேப்டன் என்பவர் ஒவ்வொரு வீரரையும் எப்படி கையாளுகிறார் என்பதை பொறுத்து தான் இருக்கிறதே தவிர வெற்றி, தோல்வியின் முடிவில் அல்ல என்று உத்தப்பா கூறியுள்ளார்.