11 வயது கேன்சர் ரசிகனுடன் சந்திப்பு... நெகிழ வைத்த நிஜ ஹீரோ யுவராஜ் சிங்!
Recommended Video

டெல்லி: பஞ்சாப் அணிக்காக விளையாடும் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் தனது போராட்ட குணத்தால் அனைவராலும் விரும்பப்படுகிறார். சமீபத்தில் 11 வயது இளம் ரசிகனை யுவராஜ் சிங் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கல்நெஞ்சையும் கண்ணீர் தளும்ப செய்யும்.
36 வயதாகும் யுவராஜ் சிங், இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்தவர் யுவராஜ் சிங். ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த அவருடைய சாதனையை யாராலும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது.

அதிரடி விளையாட்டுக்கு சொந்தக்காரரான அவர், 2011ல் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனை செய்தார். அவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பிறகு, மறுவாழ்வு பெற்றார்.
அவருடைய போராட்ட குணம்தான், அவரை பலரும் விரும்புவதற்கு முக்கிய காரணமாகும். இந்திய அணியில் விளையாடுவதற்கு யோ யோ பயிற்சியில் தேற வேண்டும் என்றபோது, அதிலும் தேர்ச்சி பெற்றார்.
கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை நடத்தி வருகிறார். தற்போது ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தூரில் சமீபத்தில் நடந்த போட்டிக்கு இடையே, 11 வயது ராக்கி என்ற சிறுவனை யுவராஜ் சந்தித்து பேசினார். ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.
அதற்கு முன்பாக, தன்னுடைய ஹீரோவான யுவராஜ் சிங்கை சந்திக்க வேண்டும் என்று அந்த சிறுவன் ஆசைப்பட்டுள்ளான். அவனை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறியதுடன், தைரியத்தையும் அளித்துள்ளார் யுவராஜ். பஞ்சாப் அணியின் ஜெர்சி, தொப்பி போன்றவற்றை பரிசாக அளித்து, உடல்நலம் தேறி வருவதற்காக வாழ்த்தையும் கூறி யுவராஜ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான படங்களை, பஞ்சாப் அணி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. மைதானத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் மிகப் பெரிய போராட்டத்தை சந்தித்த யுவராஜ் சிங்கின் இந்த செய்கைக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications