டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சமீப காலமாக தோனியை பற்றியும், கபில் தேவ் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இந்த நிலையில், அவர் தனது சிறு வயதில் தன் தந்தை புலியை கொன்று, அதன் ரத்தத்தை நெற்றியில் திலகமிட்டார் என மற்றொரு சர்ச்சையான விஷயத்தை கூறி இருக்கிறார்.
யோக்ராஜ் சிங் ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தை வைத்திருக்கிறார். அவர்தான் யுவராஜ் சிங்கிற்கும் சிறுவயதில் பயிற்சி அளித்தார். அவரது பயிற்சி முறைகள் மிகவும் கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், யோக்ராஜ் சிங்கிடம் சில மாதங்கள் பயிற்சி பெற்றார். அது குறித்து யோக்ராஜ் சிங் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

அப்போது பேட்டியை எடுத்தவர், "உங்கள் பயிற்சி மையத்தில் சேர வேண்டும் என ஒரு சிறுவன் விரும்பினால் அவருக்கு என்ன மாதிரியான மனநிலை இருக்க வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த யோக்ராஜ் சிங் அந்த "புலிக் கதை"யை கூறினார். "முதலில் இறப்பின் மீதான அச்சம் முடிவுக்கு வரவேண்டும். எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் தாயிடம் என்னை புலி வேட்டைக்கு அழைத்துச் செல்வதாக கூறினார் என் தந்தை. என் தாய் மிகவும் பயந்து போனார். அப்போது, "ஒருவேளை இவன் இறந்து விட்டால் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. இவன் உயிருடன் இருந்தால் நான் இவனை ஒரு புலியை போல மாற்றுவேன்." என்றார் என் தந்தை."
"பின்னர் காலாதூங்கி என்ற காட்டுப் பகுதியில் 3 வயது சிறுவன் அவன் தாயுடன் அமர்ந்திருந்தான். என் தந்தை ஒரு துப்பாக்கியை ஏந்திக் கொண்டு இருந்தார். அப்போது நிலவு வெளிச்சத்தில் நள்ளிரவில் நாங்கள் அங்கு இருந்தோம். ஒரு மேடான பகுதியில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது புலி அங்கு வந்தது. அந்த சிறுவன் அப்போது கூச்சலிட முயன்றான். ஆனால், அவனுடைய தாய் அவனது வாயை இறுக்கமாக பொத்தினார்."
"6 அடி தூரத்திலிருந்து என் தந்தை அந்த புலியை சுட்டு வீழ்த்தினார். அதன் தலையில் குண்டு பட்டு இறந்தது. ஒரு மலையைப் போல அந்த புலி சரிந்தது. அந்த சிறுவன் பேச்சற்று போயிருந்தான். அப்போது எனது தந்தை, எனது தாயிடம் என்னை அழைத்து வர சொன்னார். அவர் என்னிடம் அப்போது. "ஒரு புலிக்குட்டி எப்போதும் புல்லை தின்னாது." என்றார். அந்தக் குரல் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது."
"பின்னர் என் தந்தை என்னை புலியின் மீது அமர வைத்தார். அதன் ரத்தத்தை எடுத்து எனது உதடு மற்றும் நெற்றியில் வைத்தார். அந்தப் புகைப்படம் எப்போதுமே எனது வீட்டில் உள்ளது. எனது கிரிக்கெட் பயிற்சி மையமும் அதை போன்றது தான். நான் யுவராஜ் சிங்கையும் அதேபோலத்தான் பயம் இல்லாதவராக உருவாக்கினேன்." என்றார் யோக்ராஜ் சிங்.
இது உண்மைக் கதையா? அல்லது கற்பனை கதையா? அல்லது உண்மை கலந்த கற்பனை கதையா? என்பதே நம் முன் உள்ள கேள்வி.