மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் எத்தனை ஆக்ரோஷமானவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அவர் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் போது மிகவும் அமைதியானவராக இருந்தார் என்றும், எதிர் அணி வீரர்களோடு வார்த்தைகளில் மோதுவது என்பது ஒரு சம்பவத்தின் போது யுவராஜ் சிங் செய்யும் கடைசி செயலாக மட்டுமே இருக்கும் எனவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அமைதியாக இருந்த யுவராஜ் சிங்கை ஆக்ரோஷமானவராக மாற்றிய பெருமை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹைத்தான் சேரும் என அவரது தந்தை யோகராஜ் சிங் ஒரு தகவலைத் தெரிவித்து இருக்கிறார்.

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனபோது தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார். அப்போது ஒரு பவுன்சர் பந்து அவரைத் தாக்கியது. அவர் கீழே சுருண்டு விழுந்தார். அப்போது யுவராஜ் அருகே வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ், "ஹே பையா.. இது பள்ளிக்கூட கிரிக்கெட் இல்லை, எழுந்து நின்று பேட்டிங் செய்" என்று அவரை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.
முதன் முதலில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடுகிறோம் என்ற ஆர்வத்திலும், மகிழ்ச்சியிலும் இருந்த யுவராஜ் சிங்கிற்கு, இந்த மோசமான பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதன் பிறகுதான் அவர் இது போன்ற மரியாதை இல்லாமல் பேசும் எதிரணி வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொண்டிருக்கிறார்.
அதன் வெளிப்பாடுதான் 2007 டி20 உலகக் கோப்பையின் போது நடந்த சம்பவம் அப்போது இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டிய போது ஆக்ரோஷமடைந்து அவருடன் மோதியதுடன், அதற்கு ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து பதிலடி கொடுத்து இருந்தார் யுவராஜ் சிங்.
இது பற்றி யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் பேசுகையில், "கிரிக்கெட் என்பது மனிதர்களால் நடத்தப்படும் ஒரு போர். நீங்கள் ஆடுகளத்தில் இருக்கும் போது சில சமயம் உணர்ச்சி வசப்பட்டு சில விஷயங்களைச் செய்ய நேரிடும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியா வீரர்கள் ஆடுகளத்தில் பேசுவதைக் கேட்டு இருக்கிறீர்களா எனத் தெரியவில்லை.
அவர்கள் உலகில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி திட்டுவார்கள். அகராதியில் இருக்கும் அத்தனை மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள். யுவராஜ் சிங் ஒரு பந்து தாக்கியதால் கீழே விழுந்துவிட்டார். அப்போது ஸ்டீவ் வாஹ் அவர் அருகே சென்று 'இது பள்ளிக்கூட கிரிக்கெட் இல்லை, எழுந்து நின்று ஆடு, சிறுவா' என்று கூறினார். அதன் பிறகுதான் யுவராஜ் எழுந்து நின்றார். அதன் காரணமாகத்தான் பிளின்டாப் உடன் யுவராஜ் சிங் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்" என்றார்.