மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் சாகலும் அவருடைய மனைவி தனுஸ்ரீ விவகாரத்து செய்து கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இந்த தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் ஊகிக்க வேண்டாம் என்று சாகல் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை சாகல் வெளியிட்டுள்ளார்.

அதில் என்னுடைய ரசிகர்கள் எனக்கு அளவற்ற அன்பையும் ஆதரவையும் வழங்குவதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். உங்களுடைய ஆதரவு இல்லை என்றால் நான் எந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. ஆனால் என்னுடைய பயணம் இன்னும் முடியவில்லை. இன்னும் பல சிறப்பு மிக்க ஓவர்களை என் நாட்டுக்காக நான் வீசுவேன்.
நான் ஒரு விளையாட்டு வீரராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அதே சமயம் ஒரு மகனாக ஒரு சகோதரனாக ஒரு நண்பராக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். அதே சமயம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு ஊகங்களை சமூக வலைத்தளத்தில் பலரும் எழுதுகிறீர்கள்.
இது உண்மையாகவும் இருக்கலாம்! உண்மை இல்லாமலும் இருக்கலாம்? இதனால் ஒரு சகோதரனாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை யாரும் தலையிட்டு ஊகிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி விட்டது.
மற்றவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய குடும்பத்திலிருந்து வந்தவன் நான்.
நான் இந்த இடத்திற்கு வந்ததற்கு என்னுடைய கடும் உழைப்பு தான் காரணம். நான் என்றுமே குறுக்கு வழியை பயன்படுத்தி இந்த இடத்திற்கு வரவில்லை. நான் எப்போதுமே நல்ல விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இறைவனின் ஆசிர்வாதத்துடன் தொடர்ந்து உழைத்து வருகிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் எனக்கு வேண்டுமே தவிர உங்களுடைய இரக்கம் எனக்கு வேண்டாம். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கின்றேன் என்று சாகல் கூறியுள்ளார்