லண்டன்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பாத்ரூமில் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து நட்சத்திர ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் அழுகைக்குத் தாமும் ஒரு காரணம் என்று கூறிய சாஹல், அந்த நாளினை மறக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களத்தில் அதிகளவு ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். இந்திய வீரர்களைப் பார்த்து எதிரணி வீரர்களை ஏதாவது கமெண்ட் செய்தாலே, அடுத்த நொடி விராட் கோலி பதிலடி கொடுப்பார். மனதளவில், உடலளவிலும் பலம் வாய்ந்த விராட் கோலி, பாத்ரூமில் கதறி அழுதிருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

விராட் கோலியின் அழுகைக்கு 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி காரணமாக அமைந்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பின் இந்திய அணியின் ஓய்வறையில் நடந்த சம்பவங்கள் குறித்து யுஸ்வேந்திர சாஹல் பேசி இருக்கிறார்.
சாஹல் பேசுகையில், விராட் கோலி களத்தில் உருவாக்கும் எனர்ஜியை யாருடனும் ஒப்பிடவே முடியாது. ஒவ்வொரு நாளும் அதே எனர்ஜியுடன் இருப்பார். ஒருநாளும் அந்த எனர்ஜி குறைந்து பார்த்தே இல்லை. ஆனால் 2019 உலகக்கோப்பை தொடரின் அடைந்த தோல்விக்கு பின் பாத்ரூமில் விராட் கோலி கதறி அழுவதைப் பார்த்தேன். அந்தப் போட்டியில் கடைசி பேட்ஸ்மேன் நான்தான்.
நான் அவரைக் கடந்த சென்ற போது, விராட் கோலியின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. அந்தப் போட்டிக்கு ஒவ்வொரு இந்திய வீரரும் கண்ணீருடன் இருந்தார்கள். அந்த போட்டியை நினைக்கும் போதெல்லாம் சிறப்பாக பவுலிங் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். ஏனென்றால் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 63 ரன்களை விட்டுக் கொடுத்தேன்.
அதுதான் தோனியின் கடைசி போட்டியும் கூட.. அந்த போட்டிய்க்ல் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்திருக்க வேண்டும். 10 முதல் 10 ரன்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் களத்தில் அப்படி நினைப்பதே கடினமான விஷயம். ஏனென்றால் ஒவ்வொரு பந்திலும் ஒரு பெரிய விஷயம் நடந்து கொண்டே இருக்கும். அந்த நாளினை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.