லண்டன் : தனக்கு மூன்று உலகக்கோப்பை தொடரிலும் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அது தனக்கு பழகிவிட்டது என மனதில் வலியை மறைத்துக் கொண்டே சிரித்தபடி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சாஹல்.
இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னராக வலம் வந்த யுஸ்வேந்திர சாஹல் 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

அவரது நீக்கம் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் போன்ற பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் சாஹலை தேர்வு செய்யாதது தவறு என சுட்டிக் காட்டினர்.
ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், ஜடேஜா தங்களுக்கான இடங்களை உலகக்கோப்பை அணியில் உறுதி செய்துள்ள நிலையில், மாற்று ஸ்பின்னர் என்ற ஒரு இடம் மட்டுமே இருந்தது. அதிலும் சாஹலுக்கு இடம் அளிக்காமல், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அக்சர் பட்டேல் காயம் காரணமாக தற்போது அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும் டி20 உலகக்கோப்பைகளில் சாஹல் ஒதுக்கப்பட்ட வீரராக இருந்தார். தற்போது ஒருநாள் அணியிலும் என்ன காரணம் என்றே தெரியாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்.
தனக்கு அணியில் இடம் கிடைக்காத நிலையில், சாஹல் இங்கிலாந்து கவுன்டி முதல் தர டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆட கிளம்பி சென்று விட்டார். அங்கே கென்ட் அணிக்காக இரண்டு போட்டிகளில் அவர் ஆடி இருக்கிறார். தொடர்ந்து ஆடும் முடிவிலும் இருக்கிறார்.
இந்த நிலையில், விஸ்டன் கிரிக்கெட் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தனது நீக்கம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், "அணியில் 15 வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும். ஏனென்றால், இது உலகக்கோப்பை. அங்கே 17 - 18 வீரர்களை அணியில் தேர்வு செய்ய முடியாது. நான் முதலில் அணியில் இடம் கிடைக்காததை எண்ணி கொஞ்சம் மோசமாக உணர்ந்தேன். ஆனால், இப்போது எனக்கு பழகி விட்டது. மூன்று உலகக்கோப்பை தொடர்கள் ஆகி விட்டது" எனக் கூறி சிரித்தார் சாஹல்.
முன்பு 2021 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் அணியில் இடம் பெற்றாலும் போட்டிகளில் அவர் கடைசி வரை ஆடவில்லை. அவரை வெளியே அமரவைத்து இருந்தது இந்திய அணி நிர்வாகம்.
அந்த இரண்டு உலகக்கோப்பை தொடர்களுடன் தற்போது 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரும் சேர்ந்து மூன்று உலகக்கோப்பை தொடர்களில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், "நான் அணியில் இருக்கிறேனோ இல்லையோ அவர்கள் எல்லாம் என் சகோதரர்கள் போன்றவர்கள் தான். அவர்கள் நிச்சயம் நன்றாக ஆடுவார்கள். இந்தியா உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பது தான் முக்கிய குறிக்கோள். ஏனெனில், அது தனிப்பட்ட தொடர் அல்ல." என்றார் சாஹல்.
தற்போது இங்கிலாந்தின் கவுன்டி தொடரில் கென்ட் அணிக்காக முதல் தர டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார் சாஹல். அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் இங்கே ஆடி வருவதாக அவர் கூறினார்.