7 போட்டியில் 15 விக்கெட்.. இங்கிலாந்தில் சாஹல் வெறித்தனம்.. இப்பயாச்சும் இந்திய அணியில் இடம் கொடுங்க
லண்டன்: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், இங்கிலாந்து ஒருநாள் கோப்பை (One Day Cup) கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடி விக்கெட் வேட்டையாடி வருகிறார். இதை அடுத்து அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் சாஹல் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப பந்துகளை நன்றாக சுழல வைக்கும் சாஹல், தொடர்ந்து நீண்ட ஸ்பெல்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார். நார்த்தாம்ப்டன்ஷயர் அணி நிர்வாகம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சாஹல் விக்கெட்டுகள் மூலம் காப்பாற்றி வருகிறார்.

சாஹல் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டுப் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் விக்கெட் வேட்டை நடத்தினாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. சாஹல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் விளையாடவில்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார்.
இடையே 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சாஹல் தேர்வு செய்யப்பட்டாலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதன் பிறகு தேர்வுக் குழு அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் புறக்கணித்து வருகின்றனர். தற்போது 2027 ஒருநாள் உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்த அபார பந்துவீச்சின் மூலம் சாஹல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் தற்போது குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் சுழற் பந்துவீச்சாளரான சாஹல் மீண்டும் அணிக்குள் நுழைவது எளிதான காரியமல்ல. தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக் குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதே சாஹலின் தற்போதைய திட்டமாக உள்ளது.


Click it and Unblock the Notifications

