பெங்களூர் : நடன இயக்குநர் பிரதிக் என்பவருடன் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையான நிலையில், நட்சத்திர ஸ்பின்னர் சாஹல் மனைவி தனஸ்ரீ சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனஸ்ரீயை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியின் போது நடன இயக்குநர் பிரதிக் உதேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படம் வெளியான பின் கிரிக்கெட் வீரரான சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரையும் கிண்டல் செய்து ரசிகர்கள் மீம்ஸை வெளியிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தனஸ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமெண்ட்களிலேயே ரசிகர்கள் எல்லை மீற தொடங்கினார்கள். இந்த சூழலில் தனஸ்ரீ இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், என் வாழ்வில் எப்போதும் மீம்ஸ், டிரால்ஸ் பற்றி கவலை கொண்டதே இல்லை. அதனை வழக்கமாக சிரித்து கடந்துவிடுவேன். ஆனால் இம்முறை மீம்ஸ் என்னை பாதித்ததற்கு சில காரணங்கள் உள்ளன. அது என்னை மட்டுமல்லாமல் எனக்கு நெருக்கமானவர்களையும், குடும்பத்தினரையும் பாதிப்படைய வைத்துள்ளது. சோசியல் மீடியாவில் அவரவரின் விரும்பும், நம்பிக்கை கருத்தை கூறலாம். ஆனால் மற்றவர்களின் செண்டிமெண்ட் மற்றும் மனதினை புண்படுத்த கூடாது என்பதை மறந்துவிடுகிறோம்.
இதுதான் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்துள்ளது. சோசியல் மீடியா இல்லாமல் கொஞ்சம் மனம் அமைதியாக உள்ளது. சோசியல் மீடியாவில் அனைவரும் நெகட்டிவ் மற்றும் வெறுப்பை விதைத்து வருகிறோம். எனது பணியின் ஒரு அங்கமாக சோசியல் மீடியா உள்ளது. எனது புதிய சிந்தனைகள், கொண்டாட்டங்கள் அனைத்தும் இதனை சார்ந்தே உள்ளது. அதனால் வரும் காலங்களிலாவது கொஞ்சம் விமர்சிப்பதற்கு முன் சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நானும் உங்களின் சகோதரி, அம்மா, மனைவி, நண்பரை போல் ஒரு பெண் தான். அதனால் என்னை பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திவிடுங்கள். இதுபோன்ற மீம்ஸ் மற்றும் டிரால்ஸ் என்னை பாதிக்காது. தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஜலக் திக்லா ஜா என்ற நடன நிகழ்ச்சியில் தனஸ்ரீ கலந்து கொண்டார். அந்த நடன நிகழ்ச்சியில் அத்ரிஜா சின்ஹா என்பருடன் இணைந்து தனஸ்ரீ நடனமாடி இருந்தார். இதனிடையே நடன இயக்குநருடன் நெருக்கமாக வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.