
சர்ச்சை
உலக கோப்பை காலிறுதியில், இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதியபோது, கள நடுவர் தப்பான தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக, ஐசிசி சேர்மன் சீனிவாசனை வசைமாறி பொழிந்தார் வங்கதேசத்தை சேர்ந்தவரும் ஐசிசி தலைவராக பதவி வகித்தவருமான முஸ்தபா கமால்.

தேர்வு
சீனிவாசனின் உத்தரவின்பேரில்தான் நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசின் பார்படோசில் தொடங்கிய ஒருவாரம் கொண்ட ஐசிசி வருடாந்திர ஆலோசனை கூட்டத்தின் 3வது நாளான இன்று, ஐசிசி தலைவராக ஜாகீர் அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அப்பாஸ் உருக்கம்
"நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்மீது இத்தனை பரிவு காட்டிய ஐசிசிக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. ஐசிசி உறுப்பினர்களின் தோளோடு தோள் நின்று, கிரிக்கெட் விளையாட்டை மேலும் பல கோடி மக்கள் ரசிக்க உதவிகரமாக செயல்படுவேன்" என்றார்.

சீனிவாசன் நெருக்கம்
ஐசிசி சேர்மன் சீனிவாசன், எழுந்து நின்று ஜாகீர் அப்பாசுக்கு வாழ்த்து தெரிவித்தார். சீனிவாசன் கூறுகையில், "ஜகீர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில், 7ஆயிரத்துக்கும் அதிகமாக ரன் குவித்தவர். கிரிக்கெட்டின் தூதுவராகவே அப்பாஸ் தெரிகிறார்" என்றார். ஐசிசியில் 105 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு வாய்ப்பு?
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. தற்போது ஐசிசி சேர்மனாக இந்தியாவின் சீனிவாசனும், தலைவராக பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாசும் பதவி வகிப்பதால், மீண்டும் பரபரப்பு மிக்க இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











