மும்பை : இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே பேட்ஸ்மேன்கள் தான் தலைசிறந்த வீரர்களாக இருப்பார்கள். பந்துவீச்சாளர்கள் அந்த அளவிற்கு பெரிய அளவில் சாதித்தது கிடையாது.
ஸ்ரீநாத் போன்ற வீரர்கள் அணியில் இருந்தாலும் ஒருவரால் எப்படி ஒட்டுமொத்த 10 விக்கெட்டுகளையும் எடுக்க முடியும். ஆனால் தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 10 விக்கெட்டுகளை எடுக்கும் நிலை எல்லாம் வருகிறது.

இந்த மாற்றம் ஜாஹிர் கான் அணிக்கு வந்த பிறகுதான் மெதுவாக நகர தொடங்கியது. ஜாகிர் கான் காயத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை கிரிக்கெட்டில் தொடங்கினார். அப்போது அணிக்குள் சேர்ந்த வீரர் தான் இஷாந்த் ஷர்மா. ஜாகிர் கானின் ரிவர்ஸ் ஸ்விங்கும், இஷாந்த் சர்மாவின் உயரமும் இரட்டை சக்திகளாக இணைந்து எதிரணியை தும்சம் செய்தது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் பார்த்தவர்கள் நீங்கள் என்றால் இந்த கூட்டணி எவ்வாறு சிறப்பாக செயல்பட்டது என்று உங்களுக்கு தெரியும்.
தோனி தலைமையில் அப்போது இந்திய அணி நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளங்கியது. இந்த நிலையில் ஜாகீர் காணும், இஷாந்த் ஷர்மாவும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே மாதிரி செயல்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. ஜாகிர் கான் ஒட்டுமொத்தமாக 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஐந்து விக்கெட்டுகளை 11 முறையும் 10 விக்கெட்டுகளை ஒரு முறையும் வீழ்த்தியிருக்கும் ஜாகிர் கான் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளையும் வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 207 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இஷாந்த் ஷர்மாவும் ஒட்டுமொத்தமாக 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஐந்து விக்கெட்டுகளை 11 முறையும், 10 விக்கெட்டுகளை ஒரு முறையும் கைப்பற்றி இருக்கும் இஷாந்த் சர்மா இந்தியாவில் 104 விக்கெட்டுகளையும் வெளிநாடுகளில் 207 விக்கெட்டுகளையும் சாய்த்து இருக்கிறார். இப்படி அனைத்துமே இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் ஒரே மாதிரி நிகழ்ந்திருக்கிறது.
ஜாகிர் கான் 92 டெஸ்ட் போட்டியும், இசாந்த் ஷர்மா 105 போட்டியும் விளையாடி இருக்கிறார்கள்.
இஷாந்த் ஷர்மாவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவர் இந்தியாவுக்காக கடைசியாக 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துடன் கான்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை இதனால் இருவருடைய கிரிக்கெட் வாழ்க்கையும் ஒரே மாதிரி முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.