ஜோகன்னஸ்பர்க்: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவைத் தொடர்ந்து இன்று ஜாகீர்கானும் தமது 300வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய வேகப் பந்து வீரர் ஜாகீர்கானின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் 88 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.
89-வது டெஸ்டில் விளையாடும் ஜாகீர்கான் 300 விக்கெட்டை நெருங்கியிருந்தார். 4 விக்கெட் எடுத்ததன் மூலம் அவர் 299 விக்கெட்டை தொட்டிருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் 300வது விக்கெட்டை கைப்பற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவ் மட்டுமே 300 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவின் கல்லிஸ் விக்கெட்டை வீழ்த்தி தமது 300-வது விக்கெட்டை கைப்பற்றினார் ஜாகீர்கான்.
இதனால் கபில்தேவைத் தொடர்ந்து 300 வது விக்கெட்டை கைப்பற்றி 2-வது இந்திய வேகப்பந்து வீரர் என்ற பெருமையை ஜாகீர்கான் பெற்றுள்ளார். கபில்தேவ் 131 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சுழற்பந்து வீரர்களில் கும்பளே 619 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 413 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.