நடிகை இஷா ஷ்ராவனியை மணக்கிறார் ஜாகிர்கான்
நீண்ட காலமாக காதலித்து வரும் இந்தி நடிகை இஷா ஷ்ராவனியை மணக்க கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரது வீட்டில் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து ஜாகிர்கான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பைப் போட்டியின்போது இந்தியா கோப்பையை வெல்ல ஜாகி்ர்கானின் சிறப்பான பந்து வீச்சும் ஒரு முக்கியக் காரணம். தற்போது அடுத்த முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளார் ஜாகிர்கான். அது திருமணம்.
உலகக் கோப்பையை வென்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று ஜாகிர் தனது வீட்டில் கூறியிருந்தாதல் இதுவரை அவரது பெற்றோர் எதுவும் பேச முடியாத நிலை இருந்தது. தற்போது கோப்பையைக் கைப்பற்றி விட்டதால் பெரும் நிம்மதி அடைந்துள்ள அவர்கள், ஜாகிர்கானிடம் திருமணம் குறித்து பேச ஆரம்பித்து விட்டனர்.
இதனால் ஜாகிர்கானும் திருமணம் செய்து கொள்ளும் மூடுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தி நடிகை இஷா ஷ்ராவனியை காதலித்து வருகிறார் ஜாகிர். இந்த காதலுக்கு ஏற்கனவே இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டனர்.
2005ம் ஆண்டுதான் முதன் முதலில் இஷாவை சந்தித்தார் ஜாகிர். அப்போதே இருவரும் காதலில் விழுந்து விட்டனர். இந்தக் காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் இடையில் அவர்களுக்குள் பிரிவும் ஏற்பட்டது. 2 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமலேயே இருந்தனர். கடந்த ஆண்டுதான் மறுபடியும் இருவரும் இணைந்தனர். இப்போது இருவருக்கும் இடையே முன்பை விட வலுவான காதல் நிலவுகிறது. இந்த முறை இதை திருமணத்தில் முடித்து விட இருவருமே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
விரைவில் திருமணச் செய்தி வெளியாகும் என்று இஷாவுக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications