
எங்கே கோலி?
இப்போட்டியில் முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார் ராகுல். ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார்.

பவுன்ஸ் பேக் கொடுக்கணுமா?
இந்நிலையில், இந்திய அணி மீண்டும் இந்த டெஸ்ட் போட்டியில் மீண்டு வர வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியா விட இங்கிலாந்து மிக நீண்ட தூரம் சென்றுவிட்டது. முதல் நாளில், இந்தியாவை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுவிட்டனர். ஆனால், ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. காலை இந்திய அணி களமிறங்கும் போது, இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றும் வியூகத்தோடு தான் இந்தியா களமிறங்கும். எனினும், இந்த முதல் நாள் ஆட்டத்தை இந்திய அணி மிக விரைவாக மறந்துவிட வேண்டும். ஏனெனில், டெஸ்ட் போட்டி 5 நாட்களை கொண்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அந்த முதல் நாளை மறப்பது முடியாது. இப்படியொரு மோசமான நாளில் கிரிக்கெட் விளையாடினால், நிச்சயம் அதிலிருந்து மீண்டு வருவது கடினமாகும். ஆனால், வேறு வழியில்லை. லீட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்தியா பவுன்ஸ் பேக் கொடுக்க வேண்டுமெனில், நிச்சயம் முதல் நாள் ஆட்டத்தை இந்தியா மறந்தே ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

முதல் விக்கெட்
இந்த சூழலில், இன்று (ஆக.26) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது. ஷமி ஓவரில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களில் போல்டானார். இதையடுத்து ஒன் டவுன் வீரராக டேவிட் மலன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம், ஒரு புதிய பாதையை ஷமி உருவாக்கிக் கொடுத்துள்ளார். ஏனைய இந்திய பவுலர்கள், இந்த பாதையில் பயணித்து, விரைவாக அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஒருவேளை.. ஏதாவது, அதிசயம் நடந்து இங்கிலாந்து 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானால், இந்திய அணி மீண்டும் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்க முடியும்.

வலிமை பெற்று எழுமா?
அதற்கு, ஜாகீர் கான் சொன்னது போல், முதல் நாளில் நடந்த மோசமான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் மறக்க வேண்டும். பும்ரா தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இஷாந்த் தனது அனுபவத்தை முழுசாக பயன்படுத்த வேண்டும். இன் ஸ்விங், அவுட் ஸ்விங் வீசி ஷமி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பாடுபடுத்த வேண்டும். இடையில் சிராஜ் புகுந்து விக்கெட்டுகளை அவ்வப்போது அறுவடை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு அணியாக, இந்தியா வலிமை பெற்று எழ வேண்டும். நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











