ஹராரே: இனி வழியே இல்லை, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே நட்சத்திர வீரர் சாலமன் மைர் அறிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட ஜிம்பாப்வே, சில ஆண்டுகளாக அதலபாதாளத்துக்கு சென்றது. அரசியல் தலையீடு இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக் கால கமிட்டியை தேர்வு செய்தது. இது பற்றி லண்டனில் நடைபெற்ற ஐசிசி குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.
கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு என்பதை ஏற்று மறுத்த ஐசிசி, கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தடை விதிக்க முடிவு செய்தது. தடையால், அந்நாட்டுக்கு ஐசிசி வழங்கி வந்த நிதி, நிறுத்தி வைக்கப்படும். மேலும் ஐசிசி நடத்தும் எந்தவித போட்டியிலும் ஜிம்பாப்வே கலந்து கொள்ள முடியாது.
இந் நிலையில் வேறு வழியின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தமது ஓய்வை அறிவித்துள்ளார் ஜிம்பாப்வே அணி அதிரடி பேட்ஸ்மேன் சாலமன் மைர். இதயமே நொறுங்கும் வகையில் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி ஓய்வினை அறிவிப்பதாக உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.