வாழ்க்கையை மாற்றிய "ட்வீட்".. பெரும் சிக்கலில் ஜிம்பாப்வே வீரர் - உதவி கேட்டது குத்தமா?
ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் ரியான் மீது எந்த நேரமும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. காரணம் அவர் கேட்ட அந்த ஒரு உதவி தான்.
Recommended Video
ஜிம்பாப்வே அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம் சமீபத்தில் வைரல் ஆனது.
அதுமட்டுமின்றி, அந்த ஒரேயொரு புகைப்படத்தால், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களையும், வீரர்களின் வாழ்த்துகளையும், முக்கியமாக தனக்கான ஸ்பான்சரையும் பெற்றிருந்தார் ரியான்.

உருக்கமான பதிவு
ஜிம்பாப்வே கிரிக்கெட் நிலைமையின் மோசமான முகத்தை காட்டும் விதமாக, அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில், பிளேயர்ஸ் ஷூக்கள் சிதறிக் கிடந்தன . அந்த படத்தை பதிவிட்டு கேப்ஷனில், "எங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா ? அப்படி நடந்தால் நாங்கள் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் தொடருக்கு பின்பு எங்கள் ஷூவை பசை வைத்து ஒட்டவேண்டிய அவசியம் இருக்காது" என பதிவிட்டிருந்தார்.

அன்பை பொழிந்த ரசிகர்கள்
அவரின் உருக்கமான இந்த பதிவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரிப்ளை செய்திருந்தனர். அதில், பலரும் தாங்கள் ஷூ வாங்கித் தருகிறோம் என்று பதிவிட்டனர். சிலர், 'உங்கள் காலணி சைஸ் அனுப்புங்கள், ஷூ வாங்கி அனுப்புகிறேன்' என்று பதிவிட, ட்விட்டர் நெகிழ்ச்சி களமானது.

நாங்க பாத்துக்குறோம்
எனினும், ரியானின் இந்த டீவீட்டை கண்ட உலகின் முன்னணி விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான Puma உதவிக்கரம் நீட்டியது. ரியான் பர்ல் பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள அந்நிறுவனம், "பசையை ஓரம் வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது, நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டது.

யுவி, ஹர்பஜன் ட்வீட்
கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து தனக்கு கிடைத்த பேராதரவிற்கு பின்பு ட்வீட் செய்த ரியான் பர்ல் "நான் Puma நிறுவனத்துடன் இணைகிறேன் என்பதை பெருமையாக அறிவிக்கிறேன். இதற்கு காரணம் ரசிகர்களான நீங்கள், எனக்கு கடந்த 24 மணிநேரத்தில் அளித்த ஆதரவு தான்,. உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். ரியானின் டிவீட்க்கு பிறகு Puma அளித்த ஆதரவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

நடவடிக்கை பாயும்
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ரியான் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, பத்திரிகையாளர் ஆடம் தியோ தனது ட்விட்டரில், "ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் பர்ல்ஸின் வேண்டுகோளால் மகிழ்ச்சியடையவில்லை. சில உறுப்பினர்கள் ரியான் பர்லின் ஸ்பான்சர்ஷிப் உதவிக் கோரிக்கை குறித்து கோபமாக இருப்பதாக நான் சொன்னேன், ஏனெனில் அது ஜிம்பாப்வே வாரியத்தை மோசமானதாக காட்டும் வகையில் உள்ளது. அந்த உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கூறினேன். இது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், விரைவில், ரியான் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications