ஏழை வீரர்கள்
கிரிக்கெட் உலகில் இந்தியா போன்ற நாடுகளில் தான் கிரிக்கெட் மூலம் வீரர்கள் பணம் சம்பாதித்து வருகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் நிலைமை மிகவும் மோசம். பணம் கிடைக்காது என்று தெரிந்தும், வெறும் ஆர்வத்தால் மட்டும் கிரிக்கெட் விளையாடி, கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
ஷூ கேட்டு உதவி
அதுவும் ஜிம்பாப்வே போன்ற ஏழை நாடுகளின் நிலைமை மிகவும் மோசம். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு மே மாதம் ஜிம்பாப்வே வீரர் ரியான் புருல் ஒரு ட்வீட் போட்டு இருந்தார். அதில், ஒவ்வொரு தொடர் முடிந்தவுடன், தங்களது ஷூக்களை சரி செய்யவே எங்களுக்கு நேரம் போதவில்லை. எங்களுக்கு யாராவது புது ஷூ வாங்க ஸ்பான்சர் தருவார்களா என்று கேட்டார்.
ஆஸியை பந்தாடிய ஜிம்பாப்வே
தற்போது அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஜிம்பாப்வே அணியும் சரி, ரியன் புருல்லும் சரி, தற்போது கிரிக்கெட் உலகில் அசத்தி வருகின்றனர். வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற ஜிம்பாப்வே அணி தற்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 141 ரன்களில் சுருட்டியது.
5 விக்கெட்டுகள்
இதற்கு முக்கிய காரணம், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு ஷூ உதவி செய்யுங்கள் என்று யார் கேட்டார்களோ, அதே ரியன் புருல் தான் 3 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ரியன் புருல்லுக்கு அணிகள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.