ஹராரே : ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் தனது 49 வது வயதில் காலமானதாக செய்தி வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
இதனால் ரசிகர்கள் பலரும், அவருக்கு சமூக வலைத்தளத்தில் கண்ணீர் அஞ்சலி செய்தி தந்த நிலையில், பிறகு தான் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. . ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

2000 ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக வழிநடத்தினார். இவரது காலத்தில் ஜிம்பாப்வே அணி கிரிக்கெட்டில் உலகில் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது.
ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளிலும் 189 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஹீத் ஸ்ட்ரிக் வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளராக பணிபுரிந்தார். மேலும் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் மீது சூதாட்ட புகார் எழுந்தது. இதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் ஹீத் ஸ்டிரிக்கிற்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 8 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஹீத் ஸ்டிரிக் , நடந்த அனைத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்றும் எனினும் எந்தவித சூதாட்டத்திலும் நான் இதுவரை ஈடுபட்டதில்லை என்றும் உறுதி அளித்தார்.
ஹீத் ஸ்டிரிக் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்து விட்டது என்று அவருடன் விளையாடிய ஹென்றி ஒலங்கா ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.
அதில், ஹென்றி ஒலங்கா, சோகமான செய்தி வந்திருக்கிறது. ஹீத் ஸ்டிரிக் நம்மை விட்டு பிரிந்து மறு உலகத்திற்கு சென்று விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் ஜிம்பாப்வே உருவாக்கிய சிறந்த ஆல்ரவுண்டர் என்று குறிப்பிட்ட அவர் உங்களுடன் விளையாடிய நாட்களை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னுடைய பந்துவீச்சு காலம் முடிந்தவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.
இதேபோன்று கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஹீத் ஸ்ட்ரிக் இன் மரண செய்தி மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், ஹென்றி ஒலங்கா மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ஹீத் ஸ்டிரிக் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். தவறான செய்திக்கு மன்னிக்கவும், மூன்றாம் நடுவர், அவர் அவுட் இல்லை என திருப்பி அனுப்பிவிட்டார் என்று கூறியுள்ளார். ஹீத் ஸ்டிரிக் தாம் உயிருடன் இருப்பதை கூறிய மேசஜின் ஸ்கீரின் ஷாட்டையும் அவர் பதிவிட்டுள்ளார்.