நைரோபி: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த பவுலரும் செய்யாத படு மோசமான சாதனையை செய்து இருக்கிறார் காம்பியா நாட்டு பவுலர் முஸா ஜோபார்டே. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆப்பிரிக்க டி20 உலகக் கோப்பை தகுதி போட்டியில் காம்பியா அணி ஆடியது.
இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்து டி20 போட்டி வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை செய்தது. இதுவே டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். காம்பியா அணி அதிக அனுபவம் இல்லாத அணி என்பதால் ஜிம்பாப்வே வீரர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் திணறினர்.

இதில் காம்பியா அணியின் பந்துவீச்சாளர் முஸா ஜோபார்டே 4 ஓவர்களில் 93 ரன்கள் விட்டுக் கொடுத்து பரிதாபமாக காட்சி அளித்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 23.25 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். மற்ற பவுலர்களில் ஒரு ஓவர் மட்டும் வீசிய இஸ்மைலா டாம்பா 24 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். மற்றவர்கள் சராசரியாக ஓவருக்கு 15 ரன்கள் என்ற அளவில் ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தனர்.
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் நான்கு வீரர்கள் அரை சதம் அடித்து சாதனை செய்தனர். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஒரு அணியின் நான்கு வீரர்கள் அரை சதம் அடித்ததில்லை. அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது.
மேலும், ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் பிரையன் பென்னெட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் மருமானி 19 பந்துகளில் 62 ரன்களும், கிளைவ் மடான்டே 17 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். கேப்டன் சிக்கந்தர் ராசா 43 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்து மிரட்டினார். அவர் மட்டுமே 15 சிக்ஸ் அடித்தது இருந்தார்.
முஸா ஜோபார்டே நான்கு ஓவர்களில் 93 ரன்களை விட்டுக் கொடுத்ததே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். மேலும், இந்த போட்டியில் காம்பியா அணியின் ஐந்து பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தனர். இதுவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை நடக்காத மோசமான சாதனையாக அமைந்தது.
ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் எடுத்த நிலையில் காம்பியா அணி 54 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 290 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முஸா ஜோபார்டே செய்த மோசமான சாதனையை எந்த பவுலரும் முறியடிக்க முடியாது என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.