பிரேசில் அணிக்கு எதிரான வெற்றியை மறந்து விட்டு உருகுவேயை அரை இறுதியில் வீழ்த்துவது குறித்து மட்டுமே வீரர்கள் சிந்திக்க வேண்டும் என தனது அணி வீரர்களுக்கு நெதர்லாந்து பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விக் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 2 ஆண்டு கால கடின உழைப்பை பிரேசிலுக்கு எதிரான போட்டியில் எங்களது வீரர்கள் காட்டினர். அருமையான அணி நாங்கள் என்பதை அவர்கள் அன்று நிரூபித்து விட்டனர். எங்களிடம் நம்பிக்கை நிறைய உள்ளது. எந்த அணியையும் எதிர்த்து ஆடும் தைரியமும், திறமையும் உள்ளது.
அதேசமயம், வெற்றி தலைக்கேறி பொறுமையிழந்து போகும் அணியும் அல்ல நாங்கள். இதை வீரர்களிடமும் அறிவுரையாக சொல்லியுள்ளேன். பிரேசிலை வென்றதை மறந்து விடுங்கள். உருகுவேயை சந்திக்க போகிறோம், உஷாராக இருங்கள் என்று அவர்களை எச்சரித்துள்ளேன்.
உருகுவே அணியின் ஆட்டத்தை நிறையப் பார்த்துள்ளோம். அந்த அணி வீரர்களின் ஆட்ட முறை குறித்தும் எனக்குத் தெரியும். நிச்சயம் இது கடுமையான போட்டியாகவே இருக்கும். நாங்கள் அரை இறுதிக்கு வந்ததை நெதர்லாந்தில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் நாம் அரை இறுதிக்கு வந்தது முக்கியமல்ல, அதில் வெல்ல வேண்டும். அதற்கு மேலும் போக வேண்டும். அதுதான் முக்கியம்.
மிதப்பில் இருந்தால் கிடப்பில் போட்டு விடுவார்கள். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனது வீரர்களிடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்களது ஒட்டுமொத்த அணியும் சிறப்பான ஒருங்கிணைப்பில் உள்ளது என்றார் மார்விக்.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]