உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் கிளைமேக்ஸ் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் அமெரிக்காவின் உருகுவேயும், ஐரோப்பாவின் நெதர்லாந்தும் மோதவுள்ளன.
தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும், நாளையும் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் உருகுவேயும், நெதர்லாந்தும் மோதுகின்றன.
உருகுவே....
1930ம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பைப் போட்டிகள் உருகுவேயில் நடந்தது. அந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழத்தி சாம்பியன் ஆன அணி உருகுவே.
அதன் பின்னர் 1950ம் ஆண்டு மீண்டும் சாம்பியனானது உருகுவே. அதன் பின்னர் இரண்டு முறை 4வது இடத்தைப் பிடித்தது. 1970ம் ஆண்டுடன் உருகுவேயின் ஆதிக்கம் கரைந்து, காணாமல் போய் விட்டது.
பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் கால்பந்தில் ஜாம்பவான்களாக மாறுவதற்கு முன்பு பலசாலியாக திகழ்ந்த பெருமை உருகுவேக்கு உண்டு. எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததோ அது அப்படியே தலைகீழாக மாறிப் போய் காலிப் பெருங்காய டப்பாவாக மாறிப் போனது உருகுவே நாளடைவில்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அது அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் 2 முறை மட்டுமே போட்டிக்கு அது தகுதி பெற்றது.
இப்படி பெருமையை இழந்து தட்டுத் தடுமாறியுள்ள உருகுவே இன்று அரை இறுதியில் நெதர்லாந்தை சந்திக்கிறது.
பயிற்சியாளர் ஆஸ்கர் தபரஸின் அயராத உழைப்பால் இன்று உருகுவே மீண்டும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. எதிரிகளால் சாமானியமாக எடை போட முடியாத அளவுக்கு எஃக்குத் தன்மை கொண்டதாக மாறியுள்ளது.
டியகோ போர்லான், நிக்கோலஸ் லோடெரியோ, அல்வரா பெரைரா, சுவாரஸ் என அருமையான வீரர்களுடன் களத்தில் நிற்கிறது உருகுவே. இன்றைய போட்டியி்ல சுவாரஸ் விளையாட மாட்டார். இருந்தாலும் அவரது திறமைக்கு நிகரானவர்கள் அணியில் உள்ளதால் உருகுவேயை அவ்வளவு சீக்கிரம் உருக்கி விட முடியாது என்கிறார்கள் கால்பந்து வல்லுனர்கள்.
அரை இறுதிக்கு வந்த பாதை..
லீக் போட்டிகளில் பிரான்ஸை 0-0 என்ற கணக்கில் டிரா செய்து, தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மெக்சிகோவை 1-0 என்ற கணக்கில் வென்று நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறியது.
நாக் அவுட் ரவுண்டில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு வந்தது. காலிறுதிப் போட்டியில் கானாவை 4-2 என்ற பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
நெதர்லாந்து...
கோப்பைக்கு அருகில் இரண்டு முறை வந்து கோட்டை விட்டநாடு நெதர்லாந்து. 1974ல் முதல் முறையும், 78ல் இரண்டாவது முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று நெதர்லாந்து. 74ல் ஜெர்மனியிடமும், 78ல் அர்ஜென்டினாவிடமும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அதன் பின்னர் 1998ம் ஆண்டு அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த முறை அதனால் இறுதிக்குப் போக முடியவில்லை. 4வது இடமே கிடைத்தது.
தற்போது 4வது முறையாக அரை இறுதிக்கு வந்துள்ளது நெதர்லாந்து. இப்போது வெறும் கையுடன் போகாமல் கோப்பையுடன்தான் நாடு திரும்புவது என்ற வைராக்கியத்தில் உள்ளது நெதர்லாந்து.
இந்த வைராக்கியத்திற்கேற்ப அதன் ஆட்டமும் அபாரமாக உள்ளது.
அரை இறுதிக்கு வந்த பாதை...
லீக் போட்டிகளில் டென்மார்க்கை 2-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 1-0 என்ற கணக்கிலும், காமரூனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
நாக்அவுட் ரவுண்டில் ஸ்லோவேகியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
காலிறுதிப் போட்டியில் பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இது கெளரவப் பிரச்சினை. 2 முறை சாம்பியனாக இருந்து, வலிமையான அணியாக திகழ்ந்து, அந்தப் பெருமையெல்லாம் இழந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோப்பை வாய்ப்பு கை தேடி வந்துள்ள நிலையில் அதை விடாமல் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற உருகுவே கடுமையான வெறியில் உள்ளது.
3 முறை அரை இறுதிக்கு முன்னேறி, 2 முறை இறுதிப் போட்டிவரை போய் கோப்பையைப் பெற முடியாத ஏமாற்றத்தில் இருக்கும் நெதர்லாந்து இந்த முறை எப்படியும் கோப்பையைப் பறித்து விட வேண்டும் என்ற வெறியுடன் உள்ளது.
எனவே இன்றைய போட்டியில் கண்டிப்பாக அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
முக்கிய வீரர்கள்
நெதர்லாந்து - அர்ஜென் ராபன், ஸ்னீடர், ராபின் வான் பெர்சி.
உருகுவே - போர்லான், லோடெரியோ, பெரைரா.
இந்திய நேரப்படி இன்று இரவு 11.50 மணிக்கு கேப்டவுன் மைதானத்தில் தொடங்குகிறது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]