தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையின் இன்னும் ஒரு அதிர்ச்சியாக மாரடோனாவின் அர்ஜென்டினாவை, ஜெர்மனி அட்டகாசமாக அடித்து நொறுக்கி அவுட் ஆக்கி உலகக் கோப்பைப் போட்டித் தொடரை விட்டு விரட்டியுள்ளது.
நம்பர் ஒன் அணியான பிரேசில் நேற்று முன்தினம் நெதர்லாந்திடம் தோல்வியுற்று அதிர்ச்சி அளித்தது என்றால் நேற்று அர்ஜென்டினாவை காலி செய்து கலக்கி விட்டது ஜெர்மனி.
ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே மில்லர் அபாரமான கோலடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இருப்பினும் அதிலிருந்து மீண்ட அர்ஜென்டினா கோலடிக்க கடுமையாக முயன்றது. இதன் காரணமாக ஆட்டத்தின் முதல் பாதியில் கிட்டத்தட்ட பந்து முழுவதும் அர்ஜென்டினா வசமே இருந்தது.
ஆனால் 2வது பாதி ஆட்டத்தை முழுவதுமாக தனது பக்கம் திருப்பி விட்டது ஜெர்மனி. புயல்வேக ஆட்டத்தைக் காட்டி அர்ஜென்டினாவை மிரட்டி விட்டது. இதனால் அர்ஜென்டினா அணி கோலடிக்க முடியாமல், ஜெர்மனியைத் தடுக்கவும் முடியாமல் கடுமையாக திணறியது. இந்த திணறலின் விளைவு அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு அர்ஜென்டினாவை அமுக்கி விட்டது ஜெர்மனி.
இதில் 2 கோலகளை மிரஸ்லோவ் குளோஸ் போட்டார். இன்னொரு கோலை பிரட்ரிச் போட்டார்.
ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா ஒரு கோல் கூட போட முடியாமல் கேவலமாக தோற்றுப் போனது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2 உலகக் கோப்பைப் போட்டிகளில் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அசத்தியுள்ளது ஜெர்மனி.
மாரடோனாவின் வாரிசாக வர்ணிக்கப்படும் லியோனல் மெஸ்ஸி போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தும் கூட ஒரு கோல் கூட போட முடியாமல் அர்ஜென்டினா பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிசியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தோல்வியின் மூலம் கால்பந்து போட்டியின் சூப்பர் ஸ்டார்களில் ஒன்றான அர்ஜென்டினா தனது 3வது உலகக் கோப்பைக் கனவை பறிகொடுத்து விட்டு நாடு திரும்புகிறது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]