கடந்த ஒரு மாதமாக படு விறுவிறுப்புடன் நடந்து வந்த உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் நாளையுடன் முடிவுக்கு வருவதையொட்டி தென் ஆப்பிரிக்காவில் பிரியாவிடை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
இதையொட்டி இறுதிப் போட்டி நடைபெறவுள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியம் அமைந்துள்ள, ஜோஹன்னஸ்பர்க்கின் புறநகரான சோவீடோவில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. 3 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைபெற்ற இந்தப் பேரணியில், குழந்தைகள், இளைஞர்கள், இளம் பெண்கள் வண்ண வண்ண உடை அணிந்து கலந்து கொண்டனர். நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றன.
வழக்கமாக ஆண்டுதோறும் ஆண்டின் கடைசி நாளில் சோவீடோ நகரில் கார்னிலவல் எனப்படும் இத்தகைய ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து வந்ததைத் தொடர்ந்து நேற்று இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
இந்த ஊர்வலத்தையொட்டி சோவீடோ நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதற்கிடையே இறுதிப் போட்டியையடுத்து சாக்கர் சிட்டி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள கெளடங் நகரில் அனைத்து ஹோட்டல்களும் நிரம்பி வழிகின்றன. ஜோஹன்னஸ்பர்க்கிலும் இடம் இல்லை. ரசிகர்கள் மயமாக இவை காணப்படுகின்றன.
இறுதிப் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. உலக அளவில் 500 மில்லியன் ரசிகர்கள் இறுதிப் போட்டியை டிவியில் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் உலகக் கோப்பைக்கால்பந்து தொடருக்கு விடை கொடுக்க கோலாகலமாக தயாராகி வருகிறது தென் ஆப்பிரிக்கா.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]