ஜோஹன்னஸ்பர்க்: ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைக் காண உலகத் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.இன்று நள்ளிரவு நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஜோஹன்னஸ்பர்க்கின் புறநகரான சோவிடோவில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த விறுவிறுப்பான போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியைக் காண பல்வேறு உலகத் தலைவர்கள், பல்துறைப் பிரபலங்கள் ஜோஹன்னஸ்பர்க் வந்து குவிந்துள்ளனர். நேரடியாகவும், டிவிகள் மூலமும் இறுதிப் போட்டியை 500 மில்லியன் பேர் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில், ஒரு வரலாற்றுப் படைப்பின் இறுதிக்கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். ஆப்பிரிக்க கண்டத்தின் முதல் உலகக் கோப்பைக் கால்பந்து பெரும் வரலாறு படைத்துள்ளது. ஒட்டுமொதத் ஆப்பிரிக்கர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளது என்றார் பெருமையுடன்.தொடர்ந்து அவர் கூறுகையில், நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான போட்டியைக் காண அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த போட்டித் தொடர் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் உள்ளோம் என்றார்.ஆப்பிரிக்கக் கண்டத்தின் முதல் உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முடியும் வரை ஆப்பிரிக்க மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.