கொள்ளுப் பேத்தி மறைந்த துக்கத்தில் இருந்த நெல்சன் மண்டேலாவை இறுதிப் போட்டிக்கு வருமாறு மிகவும் அழுத்தம் கொடுத்து அழைத்துச் சென்றது சர்வதேச கால்பந்து சம்மேளனம் என வருத்தப்பட்டு கூறியுள்ளார் மண்டேலாவின் பேரனான மன்ட்லா மண்டேலா.இதுகுறித்து அவர் கூறுகையில், நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என பிஃபா கடும் நெருக்கடி கொடுத்தது. அதை ஏற்றுப் போவதா,இல்லையா என்பதை தாத்தாவே முடிவெடுக்கட்டும் என்று நாங்கள் விட்டு விட்டோம்.ஆனால் பிஃபா அதிகாரிகள் எங்களது நிலையை சற்றும் புரிந்து கொள்ளவில்லை. மண்டேலா வந்தே ஆக வேண்டும் என கடுமையாக வற்புறுத்தி அழைத்துச் சென்றனர் என்றார். மண்டேலாவின் கொள்ளுப் பேத்தியான ஜெனானி மண்டேலா உலகக் கோப்பை போட்டி தொடங்கிய முதல் நாளில் விபத்தில் மரணமடைந்தார். இதனால் மண்டேலா தொடக்க விழாவுக்கு வரவில்லை என்பது நினைவிருக்கலாம். இன்னும் தனது கொள்ளுப் பேத்தி மறைந்த சோகத்திலிருந்து மண்டேலா விடுபடவில்லை. இந்த நிலையில் பிஃபா குழுவினர் அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றதாக பேரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.மன்ட்லா இதுகுறித்து மேலும் கூறுகையில், நாங்கள் இன்னும் ஜெனானியி்ன் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்த நிலையில் பிஃபா அதிகாரிகள் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால், வேறு வழியின்றி இறுதி நாள் நிகழ்ச்சிக்குப் போக முடிவெடுத்தார் மண்டேலா.ஆனால் பிஃபா அதிகாரிகள் எங்களைப் புரிந்து கொள்ளவில்லை.எங்களது உணர்வுகளை அவர்கள் அறிய மறந்து விட்டனர். எங்களது நிலையை அவர்கள் புரிந்திருக்க வேண்டும். மண்டேலாவை வற்புறுத்தியிருக்கக் கூடாது என்றார் மன்ட்லா.