உலக்க கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்ற நெதர்லந்து அணி நாடு திரும்பியுள்ளது. அந்த அணி வீரர்களை ஆம்ஸ்டர்டாம் நகரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.ஸ்பெயினிடம் தோல்வியுற்றிருந்தாலும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியதற்காக நெதர்லாந்து அணியைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.நெதர்லாந்து அணி வீரர்கள் படகு மூலம் ஈஜ் ஆற்றின் வழியாக கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆற்றின் இரு கரைகளிலும் கிட்டத்தட்ட 5 லட்சம் ரசிகர்கள் கூடி நின்று தங்களது அபிமான வீரர்களை கையசைத்தும், ஆறுதல் குரல் எழுப்பியும் வரவேற்றனர்.தோல்வியைத் தழுவியபோதிலும் தங்களை வரவேற்க பல லட்சம்ரசிகர்கள் கூடியதால் நெதர்லாந்து வீரர்கள் பெரும் வியப்பும், உற்சாகமும் அடைந்தனர். ஆற்றின் கரைகளில் கூடியிருந்தவர்களில் பலர் உற்சாக மிகுதியால் ஆற்றில் குதித்து நீந்தியபடி வீரர்களின் படகை நோக்கிப் போனதால் அவர்களை ரப்பர் படகுகளில் வந்த போலீஸார் மீட்டு கரைக்கு திருப்பி அனுப்பினர்.இந்த பிரமாண்ட வரவேற்பு குறித்து டென்னி டி ஜோங்கே என்ற ரசிகர் கூறுகையில், இப்படி ஒரு வரவேற்பை நான் இதுவரை பார்த்ததில்லை. வெற்றி பெறாவிட்டாலும் கூட நெதர்லாந்து அணிக்கு இந்த பலத்த வரவேற்பு மிகப் பொருத்தமானதே என்றார்.இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியுடன் மிகக் கடுமையாக மோதியது நெதர்லாந்து. முழு நேரத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.கூடுதல் நேரத்தில் ஒரு கோலடித்து ஸ்பெயின் வென்று கோப்பையை தட்டிச் சென்று விட்டது.அதேசமயம், 3வது முறையாகஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து பெரும் ஏமாற்றத்தை சந்திக்க நேர்ந்தது.