ஜோஹன்னஸ்பர்க்: ஜாம்பவான் பிரேசிலும், சுண்டைக்காய் வட கொரியாவும் இன்று சந்திக்கின்றன. இந்தப் போட்டியை மிக பிரமாண்டமாக வெல்ல வேண்டிய செல்லமான நெருக்குதலில் பிரேசில் உள்ளது.பத்து சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் யாராவது ஒருவர்தான் அனைவரையும் கவர்ந்த அட்டகாசமான நபராக இருப்பார். அப்படித்தான் பிரேசிலும். அர்ஜென்டினா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் என பிரமாண்ட அணிகள் பல இருந்தாலும், பிரேசில் விளையாடும் அழகே தனி. அதைப் பார்ப்பது அதை விட அழகான ஒரு விஷயம்.1930ம் ஆண்டு தொடங்கிய முதல் உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து தொடர்ந்து ஆடி வருகிறது பிரேசில். ஒவ்வொரு தொடரிலும் அது முத்திரை பதிக்கத் தவறியதில்லை. இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள ஒரே அணியும் பிரேசில்தான். நடப்புத் தொடரில் தனது முதல் ஆட்டத்தை இன்று ஆடுகிறது பிரேசில். 105வது இடத்தில் உள்ள வட கொரியாவை முதலிடத்தில் உள்ள பிரேசில் சந்திக்கவுள்ளது. வட கொரியா சாதாரண அணி என்பதால் அதை மிகப் பெரிய கோல் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என பிரேசில் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பிரேசிலுக்கு தேவையில்லாத ஒருவிதமான நெருக்குதலைக் கொடுத்துள்ளது.இதுதவிர பிரேசில் அணியில் வேறு விதமான நெருக்குதல்களும் உள்ளன. ஸ்டார் வீரர் ரோனால்டின்ஹோ இல்லை. இன்னும் சில ஸ்டார்களும் இல்லை. காகா, ரோபினோ, பேபியானோ ஆகிய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களின பெரும் எதிர்பார்ப்பை கவர்ந்துள்ளது. எத்தனை கோல்களை பிரேசில் போடப் போகிறது, அதனிடமிருந்து வட கொரியா எப்படி தப்பிக்கப் போகிறது என்பதே பிரேசில் ரசிகர்களின் ஒரே கேள்வியாக உள்ளது.