டர்பன்: 18 முறை மோதியும் இதுவரை வெல்ல முடியாத அணியாக உள்ள ஸ்பெயினை இம்முறையாவது வெல்ல வேண்டும் என்ற கனவுடன் இன்று டர்பனில் சந்திக்கிறது சுவிட்சர்லாந்து.உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்பெயினும், சுவிட்சர்லாந்தும் இதுவரை 18 முறை மோதியுள்ளன. ஆனால் ஒருமுறை கூட சுவிட்சர்லாந்து வென்றதில்லை. இரு அணிகளும் மோதும் 50வது சர்வதேச போட்டியும் இதுவாகும். எனவே இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இம்முறை பட்டத்துடன்தான் தென் ஆப்பிரிக்காவை விட்டுப் போவோம் என்று உறுதியுடன் கூறுகிறார் ஸ்பெயின் வீரர் செஸ்க் பேப்ரகாஸ். பிரேசில் அணியைப் போலவே கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலான கணிப்புகள் ஸ்பெயினை கணித்துள்ளன.எனவே இந்தப் போட்டியில் தனது வலிமையை ஸ்பெயின் பறை சாற்ற முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சுவிட்சர்லாந்து அணியைப் பொறுத்தவரை காயத்தால் அது அவதிப்பட்டுக் கொண்டுள்ளது. வேலன் பெஹ்ராமி, அலெக்சாண்டர் பிரேய் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளனர். இன்றைய போட்டியில் செஸ்க் பேப்ரகாஸ் மற்றும் சுவிஸ் வீரர் பிலிப்பி சென்டிராஸ் ஆகியோரின் மோதலைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். காகித அளவில் சுவிட்சர்லாந்தை விட வலுவான அணியாகவே ஸ்பெயின் இருந்தாலும், பிரேசிலை வட கொரியர்கள் போட்டுத் தாக்கிய விதத்தைப் பார்க்கும்போது ஸ்பெயின் மிகவும் கவனமாக விளையாட வேண்டியது அவசியமாகும் என்பது ரசிகர்களின் கணிப்பு.