போலக்வானே: உலகக் கோப்பை முக்கிய கால்பந்து ஆட்டத்தில் மெக்சிகோ அணியின் சப்ஸ்டிடியூட் வீரர்கள், பிரான்ஸை புரட்டிப் போட்டு விட்டனர். 2 கோல்கள் அடித்த மெக்சிகோ, பிரான்ஸை ஒருகோல் கூட அடிக்க விடாமல் தடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது.
கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டி வரை வந்த அணி பிரான்ஸ். ஆனால் இந்த முறை அது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை விடமோசமாக, உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தே வெளியேற்றப்படும் நிலைக்கு அது வந்து கொண்டிருக்கிறது. நேற்று நடந்த முக்கியப் போட்டியில் மெக்சிகோவிடம் 0-2 என்ற கணக்கில் படு தோல்வியைச் சந்தித்தது பிரான்ஸ்.
மெக்சிகோ அணியின் சப்ஸ்டிடியூட் வீரர்களான ஜேவியர் ஹெர்னாண்டஸ் மற்றும் குவாதமோக் பிளாங்கா ஆகியோர் தலா ஒரு கோலடித்து பிரான்ஸை பிரளயத்தில் கொண்டு போய் விட்டு விட்டனர்.
நேற்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் பிரகாசிக்கவே இல்லை. தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதில் மெக்சிகோ வீரர்கள் வெற்றியைக் கண்டனர். பிரான்ஸின் தடுப்பு முயற்சிகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் முறியடித்தனர்.
மெக்சிகோ இளைஞர் பட்டாளத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரான்ஸ் தடுமாறியது.
மிகுந்த ஈடுபாட்டுடனும், கோலை மட்டுமே குறிக்கோளாகவும் ஆடிய மெக்சிகோவுக்கு 2வது பாதி ஆட்டத்தின்போது கோல் வாய்ப்புகள் அமைந்தன. சப்ஸ்டிடியூட் வீரராக களம் இறங்கிய ஜேவியர், 64வது நிமிடத்தில் அழகான கோலைப் போட்டார்.
அவரைத் தொடர்ந்து சப்ஸ்டிடியூட் ஆக இறங்கிய இன்னொரு வீரரான பிளாங்கோ 79வது நிமிடத்தில் 2வது கோலை அடித்து பிரான்ஸை அதிர்ச்சியில் மூழ்கடித்தார்.
ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் கோலடிக்காமலேயே சுருண்டுபோனது.
இந்த தோல்வியின் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள உருகுவே போட்டியில், அது வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]