ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது இடி தாக்கி இரண்டு பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா மாவட்டத்தில் உள்ளூர் கால்பந்து ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க ஏராளமான மக்கள் மைதானத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது மழை பெய்ததால் மைதானத்தில் மேற்கூரை இல்லாததன் காரணமாக மக்கள் அருகில் இருந்த மறைவான இடத்திற்கு சென்று ஒதுங்கினர். அப்போது இடி ஒன்று தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனை அடுத்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதில் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் இருவருக்கு காயம் தீவிரமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மையான மைதானங்களில் மேற்கூரை போன்ற எந்த வசதியும் கிடையாது. இதனால் மழை நேரத்தில் ஒதுங்க வழி இல்லாமல் பார்வையாளர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால் இது போன்ற துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் மழை பெய்தாலும் கால்பந்தாட்டம் எப்போதும் நடைபெறும். ஆனால் மின்னல் வெட்டுவதால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கால்பந்தை பார்ப்பதற்காக சென்ற நபர்கள் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.