டிரோபா புயல் அச்சுறுத்தினாலும், அதுகுறித்து சற்றும் கவலைப்படாமல் உள்ள பிரேசில், இன்றைய போட்டியில் ஐவரி கோஸ்ட்டைப் புரட்டி எடுக்கத் தயாராகியுள்ளது.இன்று நடைபெறும் முக்கியப் போட்டிகளில் ஒன்று பிரேசில், ஐவரி கோஸ்ட் மோதல். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு வாக்கில் தொடங்கும் இப்போட்டியில் ஆணித்தரமான வெற்றியைப் பெற பிரேசில் உறுதியுடன் உள்ளது.தனது முதல் போட்டியில் சுண்டைக்காய் அணியான வட கொரியாவிடம், வடை கறியாகியிருக்க வேண்டியது பிரேசில். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிப் பிழைத்து 2-1 என்ற கோல் கணக்கில் கரையேறியது.எனவே இன்றைய போட்டியில் நிச்சயம் ஆணித்தரமான வெற்றியைப் பெற்றால்தான் ஜாம்பவான் என்று தங்களை மற்றவர்கள் சொல்வதற்கு அர்த்தம் இருக்கும் என்ற எண்ணத்தில் உள்ளது பிரேசில்.இன்றைய போட்டியில் பேபியானோ, ராபின்ஹோ, மைகான், எலேனோ ஆகியோர் முழு வேகத்தைக் காட்டி ஆடுவார்கள் என நம்பலாம்.அதேசமயம், ஐவரி கோஸ்ட்டும், பிரேசிலை வெல்ல ஆர்வமாகவே உள்ளது. அது கஷ்டம்தான் என்றாலும் கூட டிடியர் டிரோபா என்ற சூப்பர் ஸ்டார் இருப்பதால் படு தைரியமாக உள்ளது ஐவரி கோஸ்ட். பிரேசலுக்கு எதிராக முதல் கோலடித்தாலே அது பெரும் வெற்றி என்ற எண்ணத்திலும் உள்ளது ஐவரி கோஸ்ட்.தனது முதல் போட்டியில், போர்ச்சுகலை சந்தித்தது ஐவரி கோஸ்ட். அப்போட்டியில் அதுவும் கோல் போடவில்லை, போர்ச்சுகலையும் போட விடவில்லை. அதுவே மிகப் பெரிய வெற்றியாக ஐவரி கோஸ்ட் ரசிகர்கள் கொண்டாடினர். காரணம், போர்ச்சுகலின் சூப்பர் ஸ்டார் ரொனால்டோவை கோலடிக்க விடாமல் தடுத்தது ஐவரி கோஸ்ட்டுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைய கொடுத்தது.அதே நம்பிக்கையுடன் இன்று பிரேசிலை எதிர்கொள்கிறது ஐவரி கோஸ்ட். ஆனால் ஐவரி கோஸ்ட்டை காலி செய்வோம் என்ற நம்பிக்கையுடன் பிரேசில் களம் காண்கிறது.மொத்தத்தில், ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.