அர்ஜென்டினா
அர்ஜென்டினாவின் சான் ஜூவான் நகரில் மிக முக்கியமான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியுடன் அர்ஜென்டினா மோதியது. இதில் பிரேசில் அணி ஏற்கனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்ற நிலையில் அர்ஜென்டினாவுக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவைபட்டது. காயம் காரணமாக பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நெய்மர், காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
மேஜிக் பலிக்கவில்லை
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் ஏதும் பலன் அளிக்கவில்லை. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மேஜிக் நிகழ்த்துவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கோல் கீப்பர்
ஆட்டத்தின் பிற்பாதியில் ரசிகர்களை இருக்கையின் நுணிக்கு தள்ளிய சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கோல் அடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருந்த மெஸ்ஸி அடித்த பந்தை பிரேசில் கோல் கீப்பர் ஆலிசன் அரணாக தடுத்தார். இதன் மூலம் கோல் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது.இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
சர்ச்சை
இந்த ஆட்டத்தின் போது பிரேசில் வீரர் ரபின்ஹாவை, அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒட்டோமண்டி கையில் முட்டி தள்ளினார்.இதற்கு பிரேசில் அணி பெனால்டி வாய்ப்பை கேட்டது.ஆனால் அதனை நடுவர் தர மறுத்ததால் அர்ஜென்டினா அணி தப்பியது.
போர்ச்சுகல்லுக்கு சிக்கல்
இதனிடையே செர்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் செர்பியாவும், போர்ச்சுகல்லும் மோதின. இதில் யாரும் எதிர்பாராத வகையில் செர்பியா 2-1 என்ற கணக்கில் வென்றது.இதன் மூலம் போர்ச்சுக்கல் அணி பிளே ஆப் சுற்றில் விளையாடி வென்றால் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நாம் உலகக் கோப்பை தொடரில் காண முடியும்.