ஐவரி கோஸ்ட்டை 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது பிரேசில்.தனது முதல் போட்டியில் வட கொரியாவிடம் சற்று தடுமாறிய நிலையில் இருந்த பிரேசில், நேற்று தனது ஸ்டைல் ஆட்டத்தைக் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோலும், 2வது பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் அடித்து வென்றது பிரேசில். இருப்பினும் ஐவரிகோஸ்ட்டின் சூப்பர் ஸ்டார் டிடியர் டிரோபா ஒரு கோல் போட்டு ஐவரி கோஸ்ட்டுக்கு ஆறுதல் தேடிக் கொடுத்தார்.ஆட்டம் முழுவதும் படு விறுவிறுப்பாக இருந்தது. இருந்தாலும் பந்தைக் கட்டுப்படுத்துவதில் பிரேசிலே ஆதிக்கம் செலுத்தியது. நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் வென்றதை விட அதன் ஒருங்கிணைந்த ஆட்டமே அனைவரையும் கவர்ந்தது. ஒட்டுமொத்த வீரர்களும் அபாரமான ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் வெளிக்காட்டி ஆடினர். இதனால் பிரேசலின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐவரி கோஸ்ட் தள்ளாடியது.முதல் பாதி ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களுக்கு ஐவரி கோஸ்ட் கடுமையாக போராடி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. ஆனால் 25வது நிமிடத்தில் பிரேசில் சூப்பர் ஸ்டார் பேபியானோ போட்ட கோலால் ஐவரி கோஸ்ட் ஆடிப் போனது. அதன் பின்னர் ஆட்டம் பிரேசில் கால்களுக்கு மாறியது. பின்னர் 50வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்தார் பேபியானோ. இதனால் பிரேசில் அணி வலுவடைந்தது. அடுத்த 12 நிமிடங்களில் (62வது நிமிடம்) எலேனோ ஒரு கோலடிக்கவே பிரேசில் வெற்றி உறுதியானது.ஒருகோல் கூட போட முடியாமல் திணறி வந்த ஐவரி கோஸ்ட்டுக்கு போட்டி முடிய 11 நிமிடங்களே இருந்த நிலையில் ஆறுதல் கிடைத்தது. தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பை பயன்படுத்திய டிரோபா, அபாரமான கோலைப் போட்டு ஐவரி கோஸ்ட்டின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.இந்த வெற்றியின் மூலம் பிரேசில் நாக் அவுட் ரவுண்டுக்கு தகுதி பெற்றுள்ளது. தனது கடைசிலீக் போட்டியில் வருகிற வெள்ளிக்கிழமை போர்ச்சுகலை சந்திக்கிறது பிரேசில். இப்போட்டியில் வென்றாலும், வெல்லாவிட்டாலும் அது பிரேசிலைப் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போட்டியில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட பிரேசில் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டமும் சிறப்பான ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.