டெல்லி: 21 வயதேயான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கா கார்சியா, கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியாகியுள்ளது விளையாட்டு உலகினரை அதிர வைத்துள்ளது.
கோர தாண்டவமாடி வருகிறது கொரோனா வைரஸ். அதன் பாதிப்புக்குள்ளாகாத நாடே இல்லை என்று கூறும் அளவுக்கு உலகையே சூறையாடி வருகிறது. எங்கு பார்த்தாலும் கொரோனா பாதிப்பாகவே உள்ளது. எந்தத் துறையையும் இது விட்டு வைக்கவில்லை.

விளையாட்டுத்துறையினரும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பல முக்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 21 வயதேயான ஸ்பெயினை சேர்ந்த இளம் கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா மரணமடைந்துள்ளார். அவருக்கு லூக்கேமியா பிரச்சினை இருந்து வந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளானார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கார்சியா, அட்லெடிகோ போர்டடா ஆல்டா என்ற கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். அவருக்கு நிலைமை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியான கால்பந்து வீரராக அவர் அறியப்படுகிறார். இதுகுறித்து ஆல்டா அணி வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெலன்சியா அணியின் வீரர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி விளையாட்டு உலகினரை அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக வெலன்சியா அணியினர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீரர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் மூலம் மக்கள் அமைதி காத்து கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.