மெக்சிகோவுடனான போட்டியில் அட்டகாசமாக ஆடிய அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிப் போட்டியில் நுழைந்தது.அர்ஜென்டினா, மெக்சிகோ இடையே நேற்று நடந்த இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடுமையான போட்டியாக இருக்கும் எனகருதப்பட்ட இப்போட்டியை அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் பக்கம் திருப்பி அபாரமாக ஆடி வென்று விட்டனர்.தற்போது காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியை சந்திக்கவுள்ளது அர்ஜெந்டினா. நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் டவேஸ் அபாரமாக ஆடி இரண்டு கோல்களை அடித்தார். இன்னொரு கோலை கான்சாலோ ஹிகுயன் போட்டார்.நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு சற்றும் போட்டியாக மெக்சிகோ தோற்றமளிக்கவில்லை. அந்த அளவுக்கு அர்ஜென்டினாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் டவேஸ் தனது முதல் கோலைப் போட்டார். அதேசமயம் 33வது நிமிடத்தில் ஹிகுயன் ஒருகோலை அடித்து அணியை வலுப்படுத்தி விட்டார். 2வது பாதி ஆட்டத்தின்போது, 52 நிமிடத்தில் இன்னொரு கோலை போட்டார் டவேஸ்.இதையடுத்து மெக்சிகோவும் கோல் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு 71வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஹெர்னாண்டஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சரியான கோலைப் போட்டார். ஆனால் அதற்குள் போட்டி அவர்களை விட்டு விலகி வெகுதூரம் போய் விட்டிருந்தது.இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு எளிதாக தகுதி பெற்றது. காலிறுதியில் அது ஜெர்மனியை சந்திக்கிறது. கடந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடரிலும் காலிறுதியில் ஜெர்மனியுடன்தான் அர்ஜென்டினா மோதியது என்பது நினைவிருக்கலாம்.அந்தப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது.எனவே இந்த காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியை அர்ஜென்டினா பழி தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.