அர்ஜன் ராபனின் அபார ஆட்டம் மற்றும் சிறப்பான கோலால், ஸ்லோவேகியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து.
நேற்று நடந்த முதலாவது காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்தும், ஸ்லோவேகியாவும் மோதின. முதல் முறையாக இரு அணிகளும் நேற்று சந்தித்துக் கொண்டன.
வலிமையான அணியாக நெதர்லாந்து திகழ்ந்தாலும் கூட ஸ்லோவேகியா அதைக் கண்டு சற்றும் அச்சப்படாமல் ஆடியது. நெதர்லாந்து வீரர்களுக்குக் கிடைத்த பல கோல் வாய்ப்புகளை ஸ்லோவேகியா திறமையுடன் சமாளித்து முறியடித்தது.
ஆனால் ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ராபன், ஸ்லோவேகிய வீரர்களை ஏமாற்றி அனாயசமான ஒரு கோலைப் போட்டு திகலடிக்க வைத்தார். இந்த உலகக் கோப்பைப் போட்டியின் அபாரமான கோல்களில் ஒன்றாக இது நிச்சயம் வர்ணிக்கப்படும்.
முதல் பாதி ஆட்டத்தின்போது நெதர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
2வது பாதி ஆட்டத்தில் ஸ்லோவேகியாவின் ஆட்டத்தில் சற்று மெருகு கூடியது. இதனால் நெதர்லாந்து கோல் அடிக்க சற்று கடினமானது. இருப்பினும் 84வது நிமிடத்தில், வெஸ்லி ஸ்னீடர் தனக்குக்கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அழகான கோலாக்கினார். இதனால் 2-0 என்ற வலுவான நிலை ஏற்பட்டது.
90 நிமிடம் ஆட்டம் முடிந்த நிலையில் நெதர்லாந்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் குதித்தனர். ஆனால் ஸ்டாப்பேஜ் நேரத்தின் கடைசி விநாடியில் ஸ்லோவேகியாவுக்கு ஒரு பெனால்டி வாயப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொண்ட சூப்பர் ஸ்டார் விட்டக் கோலாக்கி அணிக்கு ஆறுதல் தேடித் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஒரு உலகக்கோப்பைப் போட்டியின் முதல் நான்கு ஆட்டங்களிலும் வென்று புதிய சாதனை படைத்துள்ளது நெதர்லாந்து.
காலிறுதிப் போட்டியில், தற்போது பிரேசிலை அது சந்திக்கவுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]