அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019 தொடரின் இரண்டாவது போட்டி அபிதாபியின் அல் நாஹ்யான் மைதானத்தில் சரியாக நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கியது. 8 ஆண்டுக்கு பின் இத்தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில் இந்திய அணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்..
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் குர்பீரீத்சிங், பந்தை அடித்து ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் 4 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாய்லாந்து அணி வீரர்கள் அதை லாவகமாக தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில், தாய்லாந்து அணி வீரர்கள் அற்புமாக விளையாடி கோல் அடிக்க முயன்றனர். ஆனால் பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்றதால் இந்திய அணி தப்பித்தது.
இதையடுத்து ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அருமையாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணியின் சுனில் ஷட்டரி, அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் தாய்லாந்து அணியின் கேப்டன் தீரசில் டாங்டா ஒரு கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 37 நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் ஷட்டரிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாய்லாந்து வீரர்கள் அதை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. அடுத்த நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் ஷட்டரி இரண்டாவது கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து ஆட்டதில் பயங்கர விறுவிறுப்பு கூடியது. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் தாய்லாந்து அணியில் முதல் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் அனிருத் தப்பா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 73 ஆவது நிமிடத்தில் தாய்லாந்து அணியில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.
ஆட்டத்தின் 77 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் ஆஷிஷ் குருணன் வெளியேற்றப்பட்டு ஜெஜெ களம் இறக்கப்பட்டார். 79 ஆவது நிமிடத்தில் தாய்லாந்து அணியில் அடுத்த மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய அணியின் ஜெஜெ களம் இறங்கிய 2 ஆவது நிமிடத்தில் அதாவது 80 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் பிரணாய் வெளியேற்றப்பட்டு ஜெர்மன்பீரீத் சிங் களம் இறக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.