மொராகோ: ஆப்பிரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி செனகல் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. மொராகோ நாட்டின் ராபிட் நகரில் நடந்த இந்தப் போட்டியில் ஒரு சர்ச்சைமிக்க VAR பெனால்டி முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால் மைதானத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். இந்தச் சம்பவத்தை ஃபிஃபா (FIFA) வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், போட்டி அதிகாரிகளின் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
போட்டியின் இறுதி நிமிடங்களில் செனகல் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனடியாகக் கண்டனம் தெரிவித்தார். "ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகள்" என இந்தச் சம்பவத்தை விவரித்த அவர், சர்ச்சைமிக்க பெனால்டி முடிவுக்கு எதிராக செனகல் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை மறைமுகமாகச் சாடினார்.

"சில ஆதரவாளர்கள் மற்றும் செனகல் அணி வீரர்கள், பயிற்சியாளர்களின் நடத்தையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு மைதானத்தை விட்டு வெளியேறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எமது விளையாட்டில் வன்முறைக்கு இடமில்லை" என்று இன்ஃபான்டினோ குறிப்பிட்டார்.
கூடுதல் நேரத்தில் ஆட்டம் 0-0 என சம நிலையில் இருந்தபோது, பிரஹீம் டியாஸ் மீதான ஒரு ஆப்பீலுக்கு VAR ஆய்வுக்குப் பிறகு மொராக்கோவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதுவே சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த செனகல் வீரர்கள் நடுவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அதன் பின்னர், அவர்களில் பெரும்பாலானோர் மைதானத்தை விட்டு வெளியேறி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
செனகல் அணியின் மேலாளர் பாப் தியாவ் தனது வீரர்களை களத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார். ஆனால், லிவர்பூலின் முன்னாள் நட்சத்திர வீரரான சடியோ மானே மட்டும் களத்தில் தங்கி, தனது சக வீரர்கள் திரும்பி வந்து ஆட்டத்தைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக, செனகல் அடித்த ஒரு கோல், ஒரு சிறிய ஃபவுல் காரணமாக நிராகரிக்கப்பட்டதால், செனகல் அணியினர் ஏற்கெனவே கோபத்தில் இருந்தனர்.
இந்தச் சூழ்நிலை மைதானத்தின் ரசிகர் பிரிவினரும் மோதி கொண்டனர். அங்கே, சில செனகல் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்று பாதுகாப்புப் பணியாளர்களுடன் மோதினர். ஆட்டம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, கூடுதல் நேரத்தின் நான்காவது நிமிடத்தில், பாப் கெய் அற்புதமான ஒரு கோலை அடித்து செனகலுக்கு 1-0 என்ற வெற்றியை உறுதி செய்தார். இந்த வரலாற்றுச் சாதனை, சர்ச்சையால் சற்று பாதிக்கப்பட்டது.
"போட்டி அதிகாரிகளால் எடுக்கப்படும் முடிவுகளை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், கால்பந்தின் சாரமே ஆபத்தில் சிக்கிவிடும்" என்று இன்ஃபான்டினோ கூறினார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இந்தச் சம்பவங்கள் தவறான செய்தியை அனுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய காட்சிகள் "மீண்டும் நிகழக்கூடாது" என்று வலியுறுத்தி CAF-ன் ஒழுங்குமுறை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.