கத்தாரின் 2வது போட்டி
ஆனால் முதல் போட்டியிலேயே சுமாரான அணியான ஈகுவடார் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி தோல்வியை சந்தித்தது. ஈகுவடார் அணியை வீழ்த்த கோல் அடிக்கும் வாய்ப்பை கூட உருவாக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் கத்தார் அணி செனகலை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 5-3-2 என்ற டிஃபென்சிவ் ஃபார்மேஷனிலேயே களமிறங்கியது. மறுபக்கம் செனகல் அணி 4-4-2 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியது.
செனகல் முன்னிலை
இதனைத் தொடர்ந்து கத்தார் அணி தொடக்கம் முதலே செனகல் அணியை தடுப்பாட்டத்தில் கட்டுப்படுத்தியது. இருப்பினும் தடுப்பாட்டத்தால் வெற்றிபெற முடியாது என்பதை அறிந்து, அவ்வப்போது தாக்குதல் ஆட்டத்திலும் கத்தார் அணி ஈடுபட்டது. ஆனால் செனகல் அணி தொடக்கம் முதலே செனகல் அணி தாக்குதல் ஆட்டத்திலேயே ஈடுபட்டது. இதன் பலனாக 41வது நிமிடத்தில் செனகல் அணியின் டியா முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணி முன்னிலை பெற்றது.
2ம் பாதியில் அட்டாக்
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செனகல் அணியின் ஃபமாரா தியது இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் கத்தார் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன் பின்னர் கத்தார் அணி வீரர் ஆஃபிஃப் ஆட்டத்தால், தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இரண்டு முறை கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், செனகல் வீரர் மென்டி கடைசி நொடியில் தடுத்து நிறுத்தினார்.
முதல் கோல் அடித்த கத்தார்
இருந்தும் தொடர்ந்து போராடிய கத்தார் அணிக்கு, 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் முகமது முன்டாரி, கத்தார் அணிக்காக உலகக்கோப்பை தொடரில் முதல் கோலை அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற நிலை நிலவிய நிலையில், 84வது நிமிடத்தில் செனகல் அணியின் பம்பா மூன்றாவது கோலை அடித்தார்.
செனகல் சாதனை
இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி தொடர்ந்து முன்னிலை பெற்றது. இறுதியாக இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அணிகளில், செனகல் அணி உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கத்தார் வெளியேற்றம்
இந்த தோல்வியின் மூலம் கத்தார் அணி கிட்டத்தட்ட உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது. 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்கா அணி குரூப் போட்டிகளிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. அதன் பின்னர் தொடரை நடத்திய நாடுகளில், குரூப் போட்டிகளோடு கத்தார் அணி மட்டுமே வெளியேறியுள்ளது.