கோவா : அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் தீபக் சர்மாவை கோவா போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இந்திய பெண்கள் கால்பந்து லீக் இரண்டாவது பிரிவில் பங்கேற்ற காட் எஃப்சியைச் (KHAD FC) சேர்ந்த இரண்டு வீராங்கனைகள், தங்களை உடல் ரீதியாகத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டினர். மார்ச் 28 அன்று இரவு கிளப் உரிமையாளரான சர்மா அவர்களின் அறைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இரவு உணவு தீர்ந்து போனதால் குறிப்பிட்ட அந்த இரண்டு வீராங்கனைகள் தங்கள் அறையில் முட்டையை வேக வைத்து உண்ண முடிவு செய்து, முட்டைகளை வேக வைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது குடி போதையில் இருந்ததாக சொல்லப்படும் தீபக் சர்மா கோபமாக உள்ளே நுழைந்து அவர்கள் கையை பிடித்து, கன்னத்தில் அறைந்து தாக்கி இருக்கிறார். இந்த அணியின் பெண் மேலாளர் நந்திதா சர்மா, தீபக் சர்மாவின் மனைவி ஆவார். அவர் தன் கணவருக்கு ஆதரவாக அந்த வீராங்கனைகளை திட்டி இருக்கிறார்.

மேலும் போட்டிகளில் பங்கேற்க கோவாவிற்கு பயணம் செய்த போதும் தீபக் சர்மா மது அருந்திக் கொண்டே வந்ததாகவும், அப்போதும் வீராங்கனைகளை தன் அருகே அமருமாறு கூறி சீண்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வீராங்கனைகளை அவர் தாக்குவது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகளும் தீபக் சர்மா மீது மபுசா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, மபுசா காவல்துறை 323, 341, மற்றும் 354ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சர்மாவைக் கைது செய்தது.
தீபக் சர்மா மீது முறையான புகார் அளிக்கப்பட்ட பின்னர், சனிக்கிழமை, மார்ச் 30 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் (மபுசா) சந்தேஷ் சோடங்கர் விளக்கினார். விசாரணையைத் தொடர்ந்து, மாபுசா போலீசார் தீபக் சர்மாவை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர், இதில் சம்பந்தப்பட்ட இரண்டு பெண் கால்பந்து வீரர்களுக்கு எதிராக தீங்கு விளைவித்தது மற்றும் பலத்தை பயன்படுத்தியது உட்பட அவர் மீது மூன்று பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
இமாச்சல பிரதேச கால்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றும் சர்மா, ஒரே இரவில் காவலில் வைக்கப்பட்டு, மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சோடங்கர் மேலும் தெளிவுபடுத்தினார்.