சென்னை: இந்தியன் சூப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டித் தொடரின் தொடக்க விழாவில் பாலிவுட்டின் அழகுப் புயலான ஐஸ்வர்யா ராய் பச்சனின் நடன நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐ.எஸ்.எல் 2 ஆவது சீசன், சென்னை நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன. டிசம்பர் 20 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்க உள்ளது.

சென்னையில் அக்டோபர் 3 இல் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக, பிரம்மாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் குழுவினரின் நடன நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
இந்த தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் அவருடைய படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனமாட உள்ளார். நடிகர் அபிஷேக் பச்சன், சென்னை அணியின் உரிமையாளர் என்பதால் இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் நடனமாட ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.