அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியாவில் கால்பந்துப் போட்டியின்போது ரசிகர்கள் தூக்கி எறிந்த ஒரு பொருள் பட்டு கால்பந்து வீரர் ஒருவர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் தூக்கி வீசிய பொருள் அந்த வீரரின் தலையில் பட்டதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்து இறந்து போனார். அவரது பெயர் ஆல்பர்ட் எபூஸ். இவர் காமரூன் நாட்டைச் சேர்ந்தவர்.
ஒளசு என்ற நகரில் ஜேஎஸ் கபிலி மற்றும் யுஎஸ்எம் அல்ஜெர் ஆகிய அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து ஒரு பொருள் மைதானத்திற்குள் வீசப்பட்டது. அந்தப் பொருள் ஆல்பர்ட்டின் தலையில் பலமாகப் பட்டது. இதில் ஆல்பர்ட் மயங்கி விழுந்து விட்டார்.
24 வயதான ஆல்பர்ட்டின் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அல்ஜீரியா மற்றும் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.