நியூயார்க்: உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்த இந்திய-அமெரிக்கரான சுனில் குலாட்டி சர்வதேச கால்பந்து சம்மேளன(பிபா) தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்று தெரிகிறது.
சர்வதேச கால்பந்து சம்மேளன(பிபா) தலைவராக செப் பிளாட்டர் 5வது முறையாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மாபெரும் ஊழல் தொடர்பாக பிபா அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் அமெரிக்கா மற்றும் ஜுரிச்சில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பிளாட்டர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் பிபா தலைவர் பதவிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்த இந்திய-அமெரிக்கரான சுனில் குலாட்டி(55) போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக 3வது முறையாக செயல்பட்டு வரும் குலாட்டி அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டு மேம்பட 1980களில் இருந்து முக்கியப் பங்காற்றி வருகிறார்.
பிபா தலைவர் பதவியை அமெரிக்கா குறிவைத்தால் குலாட்டி அந்த பதவிக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக என்.பி.சி. ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக நடந்த பிபா தலைவர் தேர்தலில் குலாட்டி இளவரசர் அலி பின் அல் ஹுசைனுக்கு ஆதரவு அளித்திருந்தார். குலாட்டியும் சரி, அமெரிக்காவும் சரி பிளாட்டர் பிபா தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அமெரிக்காவில் கால்பந்தாட்டம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் குலாட்டி அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் துணை தலைவராக 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இருந்தார். அதன் பிறகு அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆனார்.