வாஷிங்டன் : அமெரிக்காவில் பள்ளி அளவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் மாணவர்கள் அதிக கோல்கள் அடித்ததால் அப்பள்ளியின் கால்பந்தாட்ட பயிற்சியாளர் ராப் ஷேவருக்கு சஸ்பெண்ட் அளிக்கப்பட்ட ருசிகர சம்பவம் நடந்தேறியுள்ளது.
அமெரிக்காவின் லாங் தீவில் பிளெய்ன்எட்ஜ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தன்னை எதிர்த்து கடந்த 25ம் தேதி போட்டியிட்ட சவுத் ஷோர் பள்ளி மாணவர்களை 61க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்துள்ளனர்.
அந்த மாகாணத்தில் நடைமுறையில் உள்ள தோல்வி மதிப்பெண்கள் கொள்கையே ஷேவரின் இடைநீக்கத்திற்கு காரணம். இந்த கொள்கையால் மாணவர்களின் அதிகப்படியான திறமை தடுக்கப்படுவதாக ஷேவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாங் தீவில் பிளெய்ன்எட்ஜ் உயர்நிலைப் பள்ளியின் கால்பந்தாட்ட பயிற்சியாளராக பணிபுரிந்து வருபவர் ராப் ஷேவர். அந்தப் பள்ளி மாணவர்கள், இவரது பயிற்சியின்கீழ் சவுத் சோர் பள்ளி மாணவர்களை 61க்கு 13 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்துள்ளனர். கடந்த 25ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் அதிக கோல்கள் அடித்ததே தற்போது ஷேவர் சஸ்பெண்ட் பெற காரணமாக அமைந்துள்ளது.
அந்த மாகாணத்தில் தோல்வி மதிப்பெண்கள் கொள்கை என்பது நடைமுறையில் உள்ளது. மாகாணத்தின் அனைத்து மாணவர்களையும் சிறப்பாக விளையாட செய்யும் வகையில் இந்த கொள்கை அங்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு அணி 42 புள்ளிகளுக்கு மேல் அடித்தால், அதன் பயிற்சியாளர், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி முன்பு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இந்நிலையில் பிளெய்ன் எட்ஜ் பள்ளி மாணவர்கள் ஒரே போட்டியில் 61 புள்ளிகள் எடுத்ததே தற்போது பயிற்சியாளர் ஷேவருக்கு வினையாக முடிந்துள்ளது. இந்த கொள்கையின்படி முதல்முறையாக தண்டிக்கப்படுபவர் ஷேவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு மாணவர்கள் விளையாடும் இறுதிப்போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொள்கை, சிறப்பாக விளையாடும் மாணவர்களை தடுப்பதாக ஷேவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.