மாஸ்கோ: 21-வது உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா வெளியேறியது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய தோல்வியை அர்ஜென்டினா சந்தித்துள்ளது.
21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. நாக் அவுட் சுற்றுகள் இன்று துவங்கின. நடப்பு சாம்பியன் ஜெர்மனி ஏற்கனவே முதல் சுற்றுடன் வெளியேறியது. அதனால், கோப்பை வெல்லக் கூடிய அணிகளில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா முன்னிலையில் இருந்தது.
இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, 17வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 1978, 1986ல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 1930, 1990, 2014ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
1974 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையில் விளையாடும் அர்ஜென்டினா, 2014ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நாக் அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 4-3 என தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது. 2002ல் பிரிவுச் சுற்றிலேயே வெளியேறியதுதான் அர்ஜென்டினாவின் மிகவும் மோசமான செயல்பாடாகும்.
1998ல் காலிறுதி, 2006ல் காலிறுதி, 2010ல் காலிறுதி, 2014ல் பைனல் என அசத்தி வந்த அர்ஜென்டினாவுக்கு இன்றைய தோல்வி மிகப் பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் மெஸ்ஸியின் மேஜிக் பலிக்காததால் அர்ஜென்டினா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.