ஃபிஃபா உலகக்கோப்பை
36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை கனவு நிறைவேறி இருப்பதால் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு விருதுகள் மற்றும் கோப்பைகளை வென்ற மெஸ்ஸிக்கு உலகக்கோப்பை மட்டும் எட்டா கனியாக இருந்தது. இறுதியில் அவர் தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் அந்த லட்சியத்தை அடைந்தார்.
புது சர்ச்சை
இது ஒருபுறம் இருக்க, மெஸ்ஸியை விட அதிக கவனம் ஈர்த்துள்ளார் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ். இதற்கு காரணம் விருது பெறுகையில் அவர் செய்த ஒரு விஷயம். இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்ட அவர், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை கோல் அடிக்க முடியாமல் தடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதற்காக அவருக்கு கோல்டன் க்ளவுஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஒழுங்கீன செயல்
இந்நிலையில் கத்தார் ஆட்சியாளர் தமிம் ஹமாத், எமிலியானோவுக்கு அந்த விருதை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட அவர், மேடையிலேயே விருதை தனது வயிற்றுக்கு கீழ் வைத்து அநாகரீகமான ஒரு விஷயத்தை செய்தார். இதனை பார்த்த சிலர், கால்பந்தில் இதுபோன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது சகஜமான ஒன்று தானே எனக்கூறி கொண்டாடினர்.
நடவடிக்கை வேண்டும்
ஆனால் இன்னும் சிலர், ஒருநாட்டின் ஆட்சியாளர் வழங்கிய விருது, மற்றும் உலகக்கோப்பை போன்ற பிரமாண்ட மேடையில் இப்படியா மோசமாக நடந்துக்கொள்வது என மோசமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அர்ஜென்டினா அணி ஒழுங்கீன நடவடிக்கை எடுக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.